இந்தியா: ராணுவத்திடம் உதவிகேட்பு; வளங்களைத் திரட்டி ஆதரவு வழங்க உலகளாவிய பணிக்குழு
இந்தியாவில் கொவிட்-19 தொற்று காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை இன்று இருநூறு ஆயிரத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து கடந்த ஆறு நாள்களாக அங்கு நாளொன்றுக்கு ஈராயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 323,144 பேரை கொரோனா தொற்றிவிட்டது; 2,771 பேர் மாண்டு விட்டனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 17,636,307ஆகவும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 197,894ஆகவும் அதிகரித்தது. குறிப்பாக, இம்மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 34,000 பேர் கிருமித்தொற்றால் இறந்துவிட்டனர்.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
முந்திய நாளைக் காட்டிலும் குறைவான பாதிப்பு பதிவாகியுள்ள போதும் கிருமித்தொற்று இனி இறங்குமுகத்தில் இருக்கும் எனக் கருதிவிடலாகாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. ராணுவத்திடம் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் விடுவிக்கப்படும் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ மருத்துவப் பணியாளர்கள் சுகாதாரப் பணிகளுக்குத் திரும்புவர் என்றும் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், வளங்களை ஒன்றுதிரட்டுவதற்காக ஓர் உலகளாவிய பணிக்குழுவை உருவாக்க அமெரிக்காவின் முன்னணி 40 நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் ஒன்றிணைந்துள்ளனர்.
அத்துடன், இந்தியாவிற்குச் சாத்தியமுள்ள அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா நிலவரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி வழியாக உரையாடினார். முன்னதாக, அமெரிக்கா 318 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நேற்று முன்தினம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.
அமெரிக்காவின் 'கிலியட் சயின்சஸ்' நிறுவனம் குறைந்தது 450,000 'ரெம்டெசிவிர்' தடுப்பூசி மருந்துக் குப்பிகளை இந்தியாவிற்கு அனுப்பவிருப்பதாகவும் அந்நாட்டில் அம்மருந்து தயாரிப்பை ஊக்குவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை இந்தியாவில் இருந்து நேரடி பயணிகள் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்து இருக்கிறது.
அதேபோல, இன்று முதல் இந்தியா-மலேசியா இடையிலான விமானப் போக்குவரத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் மலேசியா தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.