சமூக அளவில் 16 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 29) புதிதாக 35 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமுகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த 16 பேரில் எட்டுப் பேர், டான் டோக் செங் மருத்துவமனையில் பணிபுரியும் தாதியுடன் தொடர்புடையவர்கள். அந்தத் தாதிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக நேற்று (ஏப்ரல் 28) அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தாதி பணிபுரியும் பாதிக்கப்பட்ட சிகிச்சைப் பிரிவில் (ward) தங்கியிருக்கும் நோயாளிகளுக்கும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சுகாதார அமைச்சு நடத்திய பரிசோதனையில் அந்த எட்டுப் பேருக்குத் தொற்று உறுதியாகியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் பணியமர்த்தப்பட்ட குடிநுழைவுச் சோதனைச் சாவடி அதிகாரியின் குடும்ப உறுப்பினர் ஏழுப் பேருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 38 வயது சிங்கப்பூரரான அந்த அதிகாரிக்குத் தொற்று உறுதியானதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 19 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.