சிங்கப்பூர் ராணுவ மருத்துவப் பயிற்சிக் கழகத்தின் முதல் பெண் தலைவராக 42 வயது ஷாலினி அருளானந்தம் நேற்று பொறுப்பேற்றார். இவர் 1998ஆம் ஆண்டில்
சிங்கப்பூர் ஆயுதப் படையின் உள்ளூர் மருத்துவ உபகாரச் சம்பளத்தைப் பெற்ற முதல் பெண் மருத்துவராவார்.
“உயர் பதவி வகிப்பதில் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். ஆண்களுக்கான வாய்ப்புகளைப் பெண்களும் பெற முடியும். ஆனால் பெண்கள் சுயமாகவே தங்களுக்குத் தடைகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். சில நேரங்களில் ஆண்
களைப் போல பணியாற்ற முடியுமா என்ற சந்தேகம் பெண்களுக்கு எழும். உயர் பதவி வகிக்கும் சில பெண்களில் ஒருவர் என்கிற முறையில், தங்களுடன் வேலை செய்பவர்களில் தாய்மார்கள் அதிகம் இல்லை என்று உணரும்போது சில சமயங்களில் நம்மால் முடியுமா என்ற சந்தேகம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இதுவே என்னைப் போன்ற பெண்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்,” என்று ஷாலினி தெரிவித்தார்.
தற்போது மூத்த லெப்டினண்ட் கர்னலாக இருக்கும் ஷாலினி ஜூலை 1ஆம் தேதி
கர்னலாகப் பதவி உயர்த்தப்படுகிறார்.
இவர் காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணராவார். அறுவை சிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்த ஷாலினிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் தலைமை மருத்துவ அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். கொவிட்-19 கிருமித்தொற்று சூழலில் அவசரகாலப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு செயல்முறைகளையும் திட்டங்களையும் அமலாக்குவதில் ஷாலினி முக்கிய பங்கு வகித்தார்.
“கொரோனாவால் ஏற்பட்ட சவால்கள், சிரமங்களை நான்
நேரடியாக அனுபவித்தேன். நான் மட்டுமில்லை என் ஆம்புலன்ஸ் குழுவினரும் ஓர் ஆண்டுக்கு மேலாக கடுமையாக உழைத்து வருகிறோம். எனது குழுவினரின் துணிச்சல், மீள்திறன் என்னை ஊக்கப்படுத்துகிறது,” என்றார் ஷாலினி.
ராணுவ மருத்துவப் பயிற்சிக் கழகத்தின் தளபதி என்கிற முறையில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் மருத்துவ நிலையங்களும் தேசிய சேவையாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் இவரின் மேற்பார்வையின்கீழ் வரும்.
சிங்கப்பூர் கடற்படை, மத்திய மனிதவளத் தளம், வெளிநாட்டு பொறுப்புகள் என்று பல பிரிவுகளில் இவர் அனுபவம் பெற்றவர்.