சிங்கப்பூரில் தேசிய தடுப்பூசித் திட்டம் இன்று முதல் வேகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை நாள் ஒன்றுக்கு 47,000 தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் இன்றிலிருந்து நாளுக்கு 80,000 தடுப்பூசிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மூன்று தடுப்பூசி நிலையங்களை நிர்வகித்து நடத்தும் ஒரு சுகாதார பராமரிப்பு நிறுவனம், முன்பதிவு எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் துரித தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் நடுப்பகுதி வரை மேலும் 500,000 பேர் முதல் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் அதிக தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் முன்பதிவும் கூடி வருகிறது.
தடுப்பூசி மருந்து கொள்முதல் திட்டத்தை முன்னதாகவே நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி இயக்கத்தை வேகப் படுத்த முடிந்துள்ளதாக பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று முன்தினம் தெரிவித்தது.
இதனால் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்திற்குள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற புதிய இலக்கை நிறைவேற்றக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.