கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து கட்டுமானத் தளங்களில் இருக்கும்போது, தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது மற்றவர்களுக்குத் தெரியும் விதமாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் புதிய நடைமுறைகளில் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமையவுள்ளதாக கட்டட, கட்டுமான ஆணையம் நேற்று (ஆகஸ்ட் 5) தெரிவித்தது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் இந்த அடையாள முறை பொருந்தும்.
இதன் தொடர்பில் தொழில்துறை சங்கங்களுக்கு ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றில், கட்டுமானத் தளங்களில் இருக்கும்போது எல்லா நேரங்களிலும் இந்த அடையாளத்தை அணிந்திருக்க வேண்டும் என்று கூறியது.
இந்த அடையாள முறை எந்த வடிவில் இருக்கும் என்பதை சுற்றறிக்கை குறிப்பிடவில்லை. எனினும், தலைக்கவசங்களில் ஒட்டுவில்லைகளை ஒட்டுவது, சட்டைக் கைப்பட்டி (armband), சட்டைக்கு மேல் கை இல்லாத அரைச்சட்டை (vest) அணிவது உள்ளிட்ட அடையாள முறை ஏற்கெனவே கட்டுமானத் தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.