சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இன்று (ஆகஸ்ட் 19) மேலும் தளர்த்தப்படும் விதமாக கூடுதலான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதி வழங்கப்படுகிறது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் வரை அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. சமூக அளவில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததால் மே 8 ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது வழக்கமாக்கப்பட்டு வந்தது.
கூடுதலான ஊழியர்கள் வேலையிடத்திற்குத் திரும்பியதால் பொதுப் போக்குவரத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
இந்நிலையில், தீவு முழுவதும் கடைத்தொகுதிகள், கட்டடங்களுக்குள் நுழைவோரிடம் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் நடைமுறை இன்று முதல் கட்டாயம் கிடையாது.
எனினும், நிலவரத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சென்ற சில இடங்களில் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் நடைமுறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. வரும் நாள்களில் அந்த நடைமுறை நீக்கப்படும் என்று அதை நிர்வகிப்போர் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளில் வார்டுகளுக்குச் செல்ல இன்று முதல் வருகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கொவிட்-19 பரிசோதனை முடிவுகளைக் காட்ட தேவையின்றி வார்டுகளுக்குள் நுழைய முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் வார்டுகளுக்குள் நுழைய, கடைசி 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ‘ஏஆர்டி’ அல்லது ‘பிசிஆர்’ பரிசோதனை முடிவுகளில் தங்களுக்கு ‘தொற்று இல்லை’ என்பதைக் காண்பிக்க வேண்டும்.