மலேசிய அரசாங்கமும் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானும் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு ஒத்துழைப்பைச் செய்துகொண்டுள்ளன.
அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு, நாட்டில் அரசியல் நிலைத்தன்மையையும் பொருளியல் மீட்சித்தன்மையையும் உறுதிப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பொறுப்பேற்ற பிறகு மலேசிய நாடாளுமன்றம் நேற்று முதன்முறையாகக் கூடியது. அதன்பின், மாலை 5 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் இஸ்மாயிலும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டனர்.
நிர்வாகச் சீரமைப்பு, நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளித்தல், நீதித்துறைச் சுதந்திரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஆறு முக்கிய துறைகளை அந்த உடன்பாடு உள்ளடக்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடாது என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
'எதிர்காலத்தோடு விளையாடாதீர்'
இதனிடையே, சுயநலனுக்காக நாட்டின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவித்துவிடாதீர்கள் என்று மாமன்னர் அப்துல்லா அகமது ஷா, எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
"சுயநலனுக்காக நாட்டின் எதிர்காலத்துடனும் நாட்டு மக்களுடனும் விளையாட வேண்டாம் என்பதே என் அறிவுரை," என்று, இவ்வாண்டிற்கான மலேசிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வை நேற்று தொடங்கிவைத்துப் பேசியபோது மாமன்னர் சொன்னார். அதைவிடுத்து, கொவிட்-19 தொற்றுக்கெதிரான போராட்டத்தில் எம்.பி.க்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
2019ல் தாம் அரியணை ஏறிய பிறகு அரசியல் பூசல்கள் காரணமாக இரு பிரதமர்கள் பதவி விலகிவிட்டதை மாமன்னர் சுட்டினார்.
அண்மையில் அம்னோ கட்சி எம்.பி.க்கள் பலர் ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்து, முகைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தது.
கொரோனா தொற்றுக்கெதிராக நாடு இன்னும் போராடி வருவதாகவும் ஏராளமானோர் வருமானத்தை இழந்து, சிரமப்பட்டு வருவதாகவும் மாமன்னர் குறிப்பிட்டார்.
"பொதுமக்களிடம் இருந்து துயரம் மிகுந்த நூற்றுக்கணக்கான கடிதங்களும் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் வகையில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான கடிதங்களும் எனக்கு வந்துள்ளன," என்றார் அவர்.
புதிய அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் செய்துகொண்ட இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மாமன்னர் வரவேற்றார்.