கொவிட்-19 தடுப்பூசி போடாத, 12 வயதிற்கும் குறைவான பிள்ளைகள், தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் பொது விமானத்துறை ஆணையம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
‘விடிஎல்’ திட்டத்தின்கீழ் பயணம் செய்யத் தகுதிபெற்ற பெரியவர்களுடன் இணைந்து அவர்கள் பயணம் செய்யலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்குமுன் 48 மணி நேரத்திற்குள்ளும் இங்கு வந்திறங்கியதும் அவர்கள் 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இச்சோதனை தேவையில்லை.
தொடக்கத்தில் இந்தப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் 12 வயதிற்குக் குறைந்த பிள்ளைகள் பயணம் செய்ய அனுமதி தரப்படவில்லை. ஆனால், குடும்பத்தினர் அனைவருடனும் சிங்கப்பூரர்கள் பலர் வெளிநாடு செல்ல விரும்புவதால் அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குறிப்பிட்டார்.