அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து வேலையிடங்களுக்குத் திரும்பும் அனைத்து ஊழியர்களும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
கடந்த 270 நாட்களில் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களும் அலுவலகம் திரும்ப முடியும்.
ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கொவிட்-19 பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ என்பதை உறுதிப்படுத்திய பிறகே வேலையிடங்களுக்குச் செல்ல முடியும். ‘ஏஆர்டி’ பரிசோதனைக்கான கட்டணங்களை அவர்கள் ஏற்க வேண்டும்.
இன்று சனிக்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதுபற்றி அறிவிக்கப்பட்டது.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சிங்கப்பூர் ஊழியரணியில் 96 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.
தற்போது, ஏறத்தாழ 113,000 ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவர்களில் 10 விழுக்காட்டினருக்கு மேலானவர்கள் மூத்த குடிமக்கள்.