சவால் மிகுந்த காலத்திற்கிடை
யிலும் சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஆசியான் உறுப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதைத் தொடரவேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
24வது 'ஆசியான் பிளஸ் த்ரீ' மாநாட்டில் கலந்துகொண்டு திரு லீ உரையாற்றினார். இந்த மாநாடு நேற்று மெய் நிகர் வாயிலாக நடைபெற்றது.
"சவால் மிகுந்த இந்த காலகட்டம் 'ஆசியான் பிளஸ் த்ரீ' நாடுகள் வட்டார ஒத்துழைப்பை வலுப்
படுத்துவது மற்றும் நெருக்கடிகளை ஒன்றாக இணைந்து சமாளிப்பது போன்றவற்றுக்கான திறன்களை நிரூபிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
"இச்சவால்களை நாம் ஏற்றுக்கொள்வதோடு நமது வருங்காலப் பங்காளித்துவத்துக்கான வாய்ப்புகளாக இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார் திரு லீ.
இதற்கிடையே தென்கிழக்காசியாவுக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 10 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க இருப்பதாக ஆஸ்திரேலியா நேற்று தெரிவித்தது.
மேலும் 124 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$126 மில்லியன்) நிதி உதவியை தென்கிழக்காசிய நாடுகளுக்கு வழங்க இருப்பதாகவும் அது கூறியது.
மெய்நிகர் வாயிலாக நடத்தப்பட்ட ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் இவற்றைத் தெரிவித்தார்.
மேலும் பத்து உறுப்பு நாடுகளுடனான விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவ யோசனைகளையும் அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.
"இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தின் மையமாக ஆசியான் உள்ளது. இதற்கான ஆதரவை நாங்கள் வாக்குறுதியாகத் தெரிவிப்பதோடு செயலிலும் காட்டுவோம்," என்று திரு மோரிசன் ஆசியான் தலைவர்களிடம் தெரிவித்தார்.
ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் நட
வடிக்கைகள் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் ஆசியானுடன் உறவை வலுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவின் அறிவிப்பு அமைந்துள்ளது.
"விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவம் என்பது வெறும் வார்த்தை அல்ல. உறவுகளை வலுப்படுத்தும் சாதகமான யோசனையாக இதனை ஆசியான் தலைவர்கள் கருதவேண்டும்," என்றார் திரு மோரிசன்.