மாறுபட்ட சமயக் குழுத் தலைவர் எனக் கூறப்படுபவரிடம் போலிஸ் விசாரணை

மாறுபட்ட சமயக் குழுத் தலைவர் எனக் கூறப்படுபவரிடம் போலிஸ் விசாரணை

2 mins read
d2cfb56d-08fe-4e29-b5a6-00f8e6030304
மாறுபட்ட சமயக் குழு ஒன்றின் தலைவர் எனக் கூறப்படும் ஆடவர், நகர்ப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து புறப்பட்டு காரில் ஏறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாறுபட்ட சமயக் குழு ஒன்றின் தலைவர் எனக் கூறப்படும் ஆடவர் ஒருவரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இதன் தொடர்பில் போலிசிடம் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) பதிலளித்த முயிஸ் பேச்சாளர் ஒருவர், பொது நிலையிலிருந்து விலகியதாகக் கூறப்படும் அந்தச் சமயக் கோட்பாடுகள் தொடர்பில் முயிஸ் அதன் விசாரணையை நிறைவு செய்துள்ளதாகக் கூறினார்.

"இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் நாங்கள் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம். இது, போலிஸ் விசாரணையின்கீழ் உள்ளதால் எங்களால் மேல்விவரங்களை வழங்க இயலாது," என்றார் அப்பேச்சாளர்.

இந்நிலையில், தன்னிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதை போலிஸ் உறுதிப்படுத்தியது.

"தகுதிபெற்ற, பதிவு செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து மட்டுமே சமய வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சமூகத்தினருக்கு மீண்டும் ஒருமுறை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்," என்று முயிஸ் பேச்சாளர் சொன்னார்.

நகர்ப் பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்திவரும் அந்தச் சமயக் குழு, அங்கு சமய வகுப்புகளை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் உடற்பிடிப்புச் சிகிச்சையாளர் ஒருவர் அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவதாக நம்பப்படுகிறது.

1990களில் அவர் களிம்பு (ointment) விற்பனை செய்ததாகவும் நிகழ்ச்சிகளில் ஆசி வழங்கியதாகவும் நம்பப்படுகிறது.

அவர் திருமணமானவர் என்றும் நம்பப்படுகிறது.

அந்தக் குழு 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதாக அதை முன்பு பின்பற்றியவர்களும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள மாதர்கள் மூவரின் முன்னாள் கணவர்களும் கூறினார்.

அந்தக் குழுவின் தலைவருடன் 'ஆன்மீக ரீதியாக திருமணம்' புரிவதற்காக அந்த மாதர்கள் தங்களைவிட்டு பிரிந்துவிட்டதாக அவர்களின் முன்னாள் கணவர்கள் கூறினர்.

போலிசார் தங்களை விசாரித்ததாக அந்த மாதர்களின் முன்னாள் கணவர்கள் மூவரும் அந்தக் குழுவை முன்பு பின்பற்றிய ஒருவரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினர்.

2015ஆம் ஆண்டு அக்டோபரில் அந்தக் குழுத் தலைவர் பற்றி முயிசிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்ததாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

எனினும், அவர்மீது விசாரணை நடத்துவதற்கு அப்போது போதிய ஆதரம் கிடைக்கவில்லை.

இந்த வழக்குப் பின்னர் ஃபத்வா குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், அந்த ஆடவர் மற்றும் அவரது குழுவின் நம்பிக்கைகளுக்கு அடிப்படை சமய ஆதாரம் இல்லை என ஃபத்வா குழு கூறியது.

நம்பகத்தன்மையுடைய சமய மூலங்களில் இருந்து பெறப்படாத யோசனைகளையும் செயல்முறைகளையும் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. குணப்படுத்தும் சேவை வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது.

வரும் திங்கட்கிழமை (நவம்பர் 1) தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மசகோஸ் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சமயம்முயிஸ்