தீபாவளிக்கு முதல் நாளான கடந்த புதன்கிழமை (நவம்பர் 3) இரவு கொண்டாட்ட உணர்வில் திளைக்கும் விதமாக மோட்டார்சைக்கிளோட்டிகள் பலர் லிட்டில் இந்தியாவில் ஒன்றுகூடினர்.
போக்குவரத்து போலிசும் நிலப் போக்குவரத்து ஆணையமும் அன்றைய தினம் சிராங்கூன் சாலையில் நடத்திய சோதனை நடவடிக்கையில், மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு மூன்று அழைப்பாணைகள் வழங்கப்பட்டன.
வாகனங்களின் புகை வெளியேற்ற அமைப்பைச் (exhaust system) சட்டவிரோதமாக மாற்றியது, கூடுதல் விளக்குகளைப் பொருத்தியது உள்ளிட்ட பல்வேற்று குற்றங்களுக்காக 37 வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டன.
இதுகுறித்து போலிஸ் இன்று (நவம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில், “போக்குவரத்து விதிகளை மீறுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலிஸ் தயங்காது,” என்று கூறியது.
அன்றைய தினம், வாகனமோட்டிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவலாகி வருகின்றன. அத்தகைய காணொளிகளில் ஒன்று வியாழக்கிழமை (நவம்பர் 4) இரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 144,000க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது.
பெரிய குழுவாக மோட்டார்சைக்கிளோட்டிகள் திரண்டிருந்ததை அந்தக் காணொளி காட்டியது. அவர்களில் சிலர் போக்குவரத்து போலிசாருடன் பேசிக்கொண்டிருந்தனர்.