சிங்கப்பூரின் ஊழியர் சந்தை மீட்சியடைந்து வரும் அறிகுறியாக, சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலைவாய்ப்பு மிக வேகமாக பெருகிவருகிறது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆட்குறைப்பு குறைந்துள்ளது. வேலை வாய்ப்பும் ஐந்தாவது காலாண்டாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
எனினும், வேலையின்மை விகிதம் கொள்ளைநோய்ப் பர வலுக்கு முந்தைய நிலைமையைவிட அதிகமாக, மேலும் அதிகமான குடியிருப்பாளர்கள் புதிய வேலைதேட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட ஊழியர் சந்தை அறிக்கை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில், தகவல் தொடர்பு, தொழில்முறை சேவைகள், நிதிச் சேவைகள் போன்ற வெளிநாடுகள் சார்ந்த துறைகளால் சிங்கப்பூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு 19,100 ஆக கூடியுள்ளது.
நிர்வாகம் அதற்கு ஆதரவு சேவை வழங்கும் துறைகள், சுகாதாரம், சமூக சேவைகள் போன்ற உள்ளூர் சார்ந்த சில துறைகளும் வேலைவாய்ப்பு பெருக உதவின.
தொடரும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பா லான துறைகளில் வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு குறைந்ததால், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள போதிலும், வெளிநாட்டு வீட்டுப் பணிபெண்களைத் தவிர்த்து, மொத்த வேலைவாய்ப்பு 2,400 ஆகக் குறைந்துள்ளது என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
எனினும், இந்த எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 16,300 ஆக இருந்தது.
இந்த ஆண்டு முழுவதும், வெளிநாட்டு ஊழியர் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், குறிப்பாக கட்டுமானம், கடல் துறை, செயல்முறைத் துறைகள் பயனடைந்துள்ளன என்று அமைச்சின் நிரந்தரச் செயலர் ஆபெக் காம் கூறினார்.
செப்டம்பரில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.6 விழுக்காடாக இருந்தது, இதில், சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் 3.5 விழுக்காடு.
ஆனால், சில்லறை வர்த்தகம், உணவு பானத் துறை போன்ற கொள்ளைநோயால் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேலை தேடுவதில் சிக்கல்கள் உள்ளன.
முந்தைய காலாண்டில் 2,340 ஆக இருந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை மூன்றாம் காலாண்டில் 1,900 ஆகக் குறைந்தது.
இரண்டாவது காலாண்டில் 5,580 ஆக இருந்து குறைந்த வார கால பணி அல்லது தற்காலிக பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை மூன்றாவது காலாண்டில் 4,060 ஆக குறைந்துள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையைவிட அதிகம் என்றாலும், விமானப் போக்குவரத்து, அது சார்ந்த துணைச் சேவைகள் போன்ற துறைகள் விமானப் போக்குவரத்து மீண்டும் சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று அமைச்சு கூறியது.
இதற்கிடையில், பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட வேலை வாய்ப்பு எண்ணிக்கை செப்டம்பரில் 98,700 ஆக உயர்ந்ததுள்ளது. இது ஜூன் மாதத்தில் 92,100 ஆக இருந்தது. செப்டம்பரில், ஒவ்வொரு 100 வேலையில்லாதவர்களுக்கும் 209 வேலை வாய்ப்புகள் இருந்தன, இது ஜூன் மாதத்தில் 163 ஆக இருந்தது.
சிங்கப்பூர் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் நிலையில், ஊழியர் சந்தை தொடர்ந்து மேம்படும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.