அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் $31,023 மதிப்புள்ள சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு ரொக்கத்தை வைத்திருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 46 வயது நபர் ஒருவர், புதன்கிழமை (டிசம்பர் 15) அன்று பிடிபட்டார்.
மேலும் ஒரு 57 வயது வெளிநாட்டவர், அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் $25,000 தொகையை சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டுப் பணமாக வைத்திருந்தார்.
சாங்கி விமான நிலையத்தில் புதன்கிழமை முதலாம், மூன்றாம் முனையங்களில் தான் மேற்கோண்ட ஏழு மணி நேர நடவடிக்கையில் 23 பேர் பிடிபட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் இன்று (டிசம்பர் 17) தெரிவித்தது.
தங்களிடம் $20,000க்கு மேல் ரொக்கப்பணம் இருந்ததைத் தெரிவிக்கத் தவறியதற்காக இருவர் பிடிபட்டனர்.
சிகரெட்டுகள், புகைப்பொருட்கள், மது, இதரப் பொருட்களுக்கான வரியைச் செலுத்தாதற்காகவும் 21 பேரும் பிடிபட்டனர். இவர்கள் வரியில்லாச் சலுகையைக் காட்டிலும் கூடுதல் தொகைக்கு வாங்கியிருந்தனர்.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இத்தகைய கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக ஆணையம் கூறியது.
கள்ளக்கடத்தல், சட்ட விதிமீறல்கள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை அதிகாரிகள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எல்லா பயணிகளிடம் அறிவுறுத்தப்படுவதாகவும் ஆணையம் வலியுறுத்தியது.