அப்பர் புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருக்கும் கால்வாயில் 11 வயது
இரட்டையரின் உடல்கள்
நேற்று முன்தினம் மாலை
கண்டெடுக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக அறியப்படுகிறது.
அந்த ஆடவர் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட் வட்டாரத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என்றும் சாம்பல் நிற சட்டை, 'ஸ்போர்ட்ஸ்' காலணிகள் அணிந்திருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.
அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படவில்லை.
அவரைப் பார்த்தால் உடனடி யாகத் தகவல் தெரிவிக்கும்படி டாக்சி ஓட்டுநர்களுக்குச் செய்தி அனுப்பப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 6.25 மணி அளவில் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள விளையாட்டு மைதானத்திலிருந்து இரட்டையரின் தந்தை உதவி கேட்டு அழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், அருகில் இருந்த கால்வாயில் அந்த ஆடவரின் 11 வயது மகன்கள் பேச்சு
மூச்சின்றி கிடப்பதைக் கண்டனர். சிறுவர்கள் இருவரும் மாண்டு விட்டதாக மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.
இயற்கைக்கு மாறான மரணம் என்று சிறுவர்களின் மரணத்தைக் காவல்துறையினர் வகைப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் நேற்று பிற்பகல் சென்றிருந்தபோது, காவல்துறையின் கூர்க்கா பிரிவு அதிகாரிகள் கால்வாயிலும் அருகில் உள்ள வனப் பகுதியிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
கால்வாயின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் சோஃபா நாற்காலி
மெத்தைகள் போன்ற பொருள்கள் காணப்பட்டன.
நேற்று மாலை 4 மணி அளவில் இரட்டையரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இரு ஆடவர்களும் இரு பெண்களும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வழிபட்டனர். அவர்களில் ஒருவர் மாண்ட சிறுவர்களின் சகோதரி எனத் தெரிவிக்கப்பட்டது.
இரட்டையர் இருவரும் ஆறு அல்லது ஏழு வயதாக இருந்தபோது அவர்களைப் பார்த்திருப்பதாகவும் அவர்கள் எப்போதும் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் இருந்ததாகவும் சிறுவர்களின் சகோதரியுடன் வந்திருந்த
40 வயது ஆடவர் தெரிவித்தார்.
சிறுவர்கள் இருவரும் சிறப்புத் தேவையுள்ளவர்கள் என்று அவர் கூறினார்.
கால்வாயைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் பல தரை வீடுகள் உள்ளன. அவ்வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு
கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைப் பெற குடியிருப்
பாளர்களைக் காவல்துறையினர் அணுகியிருப்பதாக நம்பப்படு கிறது.
இதற்கிடையே, இரட்டையரின் மரணம் தம்மைத் துயரில் ஆழ்த்தி இருப்பதாக ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஆன் தெரிவித்துஉள்ளார்.
"இது நினைத்துப் பார்க்க முடியாத சோக நிகழ்வு. பெற்றோராக இருக்கும் ஒவ்வொருவரையும் இது குலை நடுங்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
"இந்தச் சம்பவம் நமது சமூகத்துக்கு நிச்சயம் அதிர்ச்சி, மனவேதனையை ஏற்படுத்தியிருக்கும். எங்கள் எண்ணம் எல்லாம் மாண்ட இரட்டையரின் குடும்பத்துடன் உள்ளது. அவர்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்," என்று திருவாட்டி சிம் ஆன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
என்ன நடந்தது என்று தெரியாமல் வெறும் ஊக அடிப்படையில் இரட்டையரின் மரணம் குறித்து பேச வேண்டாம் என்றும் காவல்துறையின் அதிகாரபூர்வத் தகவலுக்காக காத்திருக்கும்படியும் அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.