சிங்கப்பூர் உட்பட 82 நாடுகளிலிருந்து செல்வோருக்குப் புதிய வழிகாட்டி நெறிமுறைகள்
அனைத்துலகப் பயணிகளுக்கான கொவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை இந்திய சுகாதார அமைச்சு திருத்தியமைத்துள்ளது.
அதன்படி, சிங்கப்பூர் உள்ளிட்ட 82 நாடுகளில் இருந்து செல்வோர், முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பின், இனி பயணத்திற்குமுன் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை. மாறாக, அவர்கள் தங்களது தடுப்பூசிச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்தால் போதுமானது. இருதரப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இந்த ஏற்பாடு இடம்பெறுவதாக அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஹாங்காங், மாலத்தீவுகள், கத்தார், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவையும் அந்த 82 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சீனாவும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 82 நாடுகளின் பட்டியலை இந்திய சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் (https://www.mohfw.gov.in) பார்க்கலாம்.
வெளிநாட்டில் இருந்து இந்தியா செல்வோர் இனிமேல் தங்களது வீட்டிலேயே ஏழு நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவை இல்லை. அத்துடன், எட்டாம் நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதும் இல்லை.
ஆனாலும், அவர்கள் தங்களது உடல்நிலையை 14 நாள்களுக்குத் தாங்களாகக் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
எல்லாப் பயணிகளும் 'ஏர் சுவிதா' இணையப்பக்கத்திற்குச் சென்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை வழங்க வேண்டும். அத்துடன், தாங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களும் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழும் உண்மையானவை எனும் உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்.
இதனிடையே, கொவிட்-19 தொற்று அபாயமுள்ள நாடுகள் பட்டியலும் வேறு அடிப்படையில் நாடுகள் வகைப்படுத்தப்படுவதும் கைவிடப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளில் 2 விழுக்காட்டினர், தரையிறங்கும் விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அவர்கள் உமிழ்நீர்/சளி மாதிரியைக் கொடுத்தபின் விமான நிலையத்தைவிட்டு வெளியேறலாம்.
இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரவுள்ளன.
கடல்வழியாகவும் தரைவழியாகவும் வருவோருக்கும் இந்தப் புதிய நெறிமுறைகள் பொருந்தும்.