சிங்கப்பூர், கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு உதவ $500 மில்லியன் வேலைகள், வர்த்தகங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று இதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அவர் தற்போது வெளியிட்டு வருகிறார்.
தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு முறை வழங்கப்படும் சிறிய வர்த்தகங்களுக்கான மீட்சி மானியத்தை அமைச்சர் அறிவித்தார்.
கடந்த ஓராண்டாக கொவிட்-19 கட்டுப்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்ட சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு அது உதவும்.
உணவு, பானம், சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் துறை நிறுவனங்கள் அவற்றில் அடங்கும்.
தகுதிபெற்ற துறைகளில் உள்ள சிறிய நடுத்தர நிறுவனங்கள், வேலைக்கு அமர்த்தியுள்ள ஒவ்வோர் உள்ளூர் ஊழியருக்குமாக, $1,000 மானியத்தைப் பெறும். ஒவ்வொரு நிறுவனமும் அதிகபட்சம் $10,000 பெறமுடியும்.
உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு வைக்காத ஒரு சில பிரிவினருக்கும் $1,000 வெள்ளி மானியம் வழங்கப்படும்.
தகுதிபெற்ற துறைகளைச் சேர்ந்த தனியுரிமை நிறுவனம் நடத்துவோர், கூட்டாக நிறுவனம் நடத்துவோருக்கும் $1,000 மானியம் வழங்கப்படும்.
அத்துடன், உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தாத உணவங்காடிக் கடைக்காரர்கள், சந்தைகள் மற்றும் காப்பிக் கடைகளில் கடை நடத்துபவர்கள் ஆகியோருக்கும் $1,000 மானியம் வழங்கப்படும்.