ஜெனிவாவில் இருக்கும் ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு அமெரிக்கா கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
ரஷ்யா பட்டியல் ஒன்றை தயாரித்து இருக்கிறது. அந்தப் பட்டியலில் உக்ரேனின் குடிமக்கள் பலரின் பெயர்கள் உள்ளன. உக்ரேன் மீது படையெடுத்து அந்த நாட்டை கைப்பற்றி அதற்குப் பிறகு, அந்த உக்ரேனியர்களைக் கொலை செய்ய அல்லது தடுப்புக் காவல் முகாம்களுக்கு அவர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிடுகிறது.
இதற்கான நம்பத்தகுந்த தகவல் கிடைத்து இருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்து உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடிதம், ஐநா மனித உரிமை தலைவரான திருவாட்டி மிச்சல் பாச்லேட்டுக்கு அனுப்பட்டு உள்ளது. பரவலான முறையில் மனித உரிமை மீறல்களை அரங்கேற்ற ரஷ்ய படைகள் திட்டமிட்டு இருக்கின்றன என்று அந்தக் கடிதத்தில் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
ரஷ்யா தயாரித்து இருக்கும் கொலை பட்டியலில் இருப்போரில், உக்ரேனில் வசிக்கும் ரஷ்யா மற்றும் பெலாருஸ் அதிருப்தியாளர்கள், ஊழல் ஒழிப்பாளர்கள், இன, சமய சிறுபான்மையினர், ஓரின புணர்ச்சியாளர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று அந்தக் கடிதம் தெரிவிக்கிறது. அவர்கள் ரஷ்யாவின் செயல்களை எதிர்ப்பவர்கள்.
அமைதியாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க ரசாயனப் பொருள்களை ரஷ்யப் படைகள் பயன்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன என்று அந்தக் கடிதம் மேலும் தெரிவிக்கிறது.
இதனிடையே, கிழக்கு உக்ரேனில் மக்களின் உயிருடன் ரஷ்யா விளையாடுகிறது என்று குற்றம் சுமத்திய ஜெர்மனி, அந்த விளையாட்டை ரஷ்யா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைக்கு அது திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறி இருக்கிறது.