சிங்கப்பூரின் புகைபிடித்தல் தடை ஜூலை 1 முதல் இன்னும் பல இடங்களுக்கு நீட்டிக்கப்படும்.
இதில் அனைத்து பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள், 10 பொழுதுபோக்கு கடற்கரைகள், பொதுப் பயனீட்டுக் கழகம் நிர்வகிக்கும் துடிப்பான, அழகான, தூய்மையான நீர்நிலைகள் திட்டத்தின்கீழ் உட்பட பல இடங்கள் உள்ளடங்கும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை அன்று இதைத் தெரிவித்தார்.
மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் கேடுகளிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பதற்காக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் கோர் கூறினார்.
தற்போது, தனியார் மற்றும் பொது வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள அக்கம்பக்க பூங்காக்கள், நீர்த்தேக்கங்கள், இயற்கை வனப்பகுதிகள் போன்ற இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூரை உள்ள நடைபாதைகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள், வெற்றுத் தளங்கள் ஆகியவற்றின் கீழும் புகைபிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.