தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கென்று விதிக்கப்பட்ட குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
அத்துடன், சமூகத்தில் உள்ள இடங்களுக்குச் செல்ல கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வரும் மார்ச் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், சிங்கப்பூர் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கான அதே கொவிட்-19 விதிமுறைகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நடப்பில் இருக்கும்.
சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 11) அன்று இதைத் தெரிவித்தது.
தங்குவிடுதிகளில் அண்மைய வாரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருவதை அமைச்சு குறிப்பிட்டுச் சொன்னது.
தடுப்பூசிகள், கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முதல், 15,000 தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் வரை வாரநாள்களில் சமூகத்தில் உள்ள இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வார இறுதி, பொது விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை, இரட்டிப்பாகும். 30,000 பேர் வரை சமூகத்தில் நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் எட்டு மணி நேரம் வரை இந்த இடங்களில் இருக்கலாம்.
தற்போது வாரநாளில் அதிகபட்சம் 3,000 பேரும், வார இறுதி, பொது விடுமுறை நாள்களில் 6,000 பேரும் வெளி இடங்களுக்குச் செல்ல முடியும்.
பிரபலமான இடங்களில் அதிகப்படியான கூட்டத்தைத் தவிர்க்க, இப்போது போலவே வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் விரும்பும் இடத்துக்குச் செல்ல விண்ணப்பம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.
வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் எண்ணிக்கையை மனிதவள அமைச்சு\ கண்காணிக்கும். அத்துடன், அதிகம் கூட்டம் ஏற்படக் கூடிய இடங்களில் அமைச்சு அதிகாரிகள் சோதனைகள் நடத்துவார்கள்.
இது மட்டுமில்லாமல், விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தவும் தங்குவிடுதிகளிலும் பொழுதுபோக்கு நிலையங்களிலும் கூடவும் அனுமதிப்படுவோர் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கான விதிமுறைகள் இவர்களுக்கும் நடப்பில் இருக்கும்.
உதாரணத்துக்கு தங்குவிடுதிகளிலும் பொழுதுபோக்கு நிலையங்களிலும் உள்ள மேற்பார்வைக்கு உட்பட்ட விளையாட்டு இடங்களில், 30 பேர் வரை விளையாட்டுகளில் ஈடுபடலாம். அவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.