இந்தியாவில் கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரு நாள் கொவிட்-19 தொற்று பாதிப்பு குறைவாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 3,614 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நேற்றுக் காலை இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவித்தது. இது, கடந்த 2020 மே 12ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் பதிவான ஆகக் குறைவான பாதிப்பு.
மேலும் 89 பேர் கொரோனா தொற்றால் மாண்டுபோயினர்.
இதனையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 42,987,875 ஆகவும் உயிரிழப்பு 515,803 ஆகவும் உயர்ந்தன.
அன்றாடம் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதமும் 0.44 விழுக்காடாகக் குறைந்தது. நேற்று முன்தினம் மட்டும் 821,122 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதுவரை மொத்தம் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன.
இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் மாண்டோர் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என்றும் அது அதிகாரபூர்வ எண்ணிக்கையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் புகழ்பெற்ற 'லான்செட்' மருத்துவ சஞ்சிகை மதிப்பிட்டு இருக்கிறது.
ஆயினும், அதனை ஏற்க மறுத்துள்ள இந்திய சுகாதார அமைச்சு, அந்த ஆய்வறிக்கை ஊகத்தின் அடிப்படையிலானது என்றும் தவறான தகவலைத் தந்துள்ளது என்றும் விளக்கமளித்துள்ளது.