ரஷ்யாவின் பிடியில் உக்ரேன் உருக்குலைந்து போயுள்ளது.இதில் உக்ரேன் மக்களுக்குத் தான் பலத்த அடி. அவர்களுக்கு உதவ முன்வரும் நபர்களில் சிங்கப்பூரரான பிரவின் சுராஜ் சாந்தகுமார் (படம்) என்பவரும் ஒருவர்.
“தி இண்டர்நேஷனல் ஃபேடரேஷன் ஆஃ லிபரல் யூத்” எனும் அமைப்பு மூலம் உக்ரேனிய நிலவரத்தை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நிலத்தடியில் ஒரு சுரங்க அறைக்குள் பதுங்கி இருந்த ஓர் உக்ரேனியக் குடும்பத்துடன் நேரடி இணையக் காணொளிச் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அந்தக் குடும்பம் தங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். நான் கண்ட காட்சிகள் என்னைப் பெரிதும் பாதித்தன,” என்றார் 34 வயதான துப்புரவு நிறுவன உரிமையாளர் பிரவின்.
அந்தக் குடும்பத்துடன் பேசிய பின் உக்ரேனுக்கு நேரடியாகச் செல்ல அவர் முடிவெடுத்தார்.
உக்ரேனிய நிலவரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணையத்தில் தகவல்கள் தேடத் தொடங்கினார். உக்ரேனிய அதிபர் வெளோடிமிர் ஸெலன்ஸ்கி ஆற்றிய உரை அவர் கண்ணில் பட்டது.
“நாட்டுப் பற்று, விட்டுக்கொடுக்காமல் போராடுவது, மீள்திறன் போன்ற பண்புகள் அவர் பேச்சில் வெளிப்பட்டன. எனக்குள் ஏதோ ஒன்றை அவரது பேச்சு தட்டி எழுப்பியது. இந்தப் போர் நெருக்கடியில் நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று தீர்மானித்தேன்,” என்றார் பிரவின்.
சிங்கப்பூரில் உள்ள உக்ரேனியத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு உக்ரேன் செல்லத் தம் பெயரைப் பதிந்துகொண்டார்.
போர்க்காலப் படைவீரர், மூத்த தாதி ஆகிய பரிமாணங்களில் இருந்துள்ள பிரவின், போலந்தில் தஞ்சம் புகுந்துள்ள உக்ரேனியர்களுக்கு உதவ முடிவெடுத்தார்.
“ஆதரவற்று இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவதும் உதவிதான்,” என்று தமிழ் முரசுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறினார் பிரவின்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் பிரவின் போலந்து தலைநகர் வார்சாவில் தரையிறங்கினார். அங்குள்ள மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து அகதிகளுக்கு உணவு மற்றும் உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார்.
சிங்கப்பூரரான சரண்ஜித் வாலியா நடத்திவரும் வார்சா சேவா எனும் சீக்கிய அமைப்பும் உதவி வருகிறது. வார்சா சேவா போன்ற பல அமைப்புகள் உக்ரேனிய அகதிகளுக்கு நாள்தோறும் இரண்டு முறை இலவசமாக உணவு அளித்துவருகின்றன. குடிநீர், போர்வை, உறங்கும் பைகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களையும் கொடுத்து உதவுகின்றன.
“நான் அடுத்த மூன்று வாரங்களுக்கு போலந்தில் மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து உதவ இருக்கிறேன். நான் ஐந்து ஆண்டுகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் மூத்த தாதியாகப் பணிபுரிந்தேன். அந்த அனுபவம் கைகொடுக்கும் என நம்புகிறேன். அடிப்படை மருத்துவச் சேவைகள் தேவையென்றால், அதை வழங்கவும் நான் தயார்,” என்றார் அவர்.
இம்மாதம் 14ஆம் தேதியன்று அவர் பயணம் மேற்கொள்வதாக இருந்தபோது எதிர்பாராத விதமாக கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு பிரவின் ஆளானார்.
ஆனால் தம் முடிவில் பிரவின் பின்வாங்கவில்லை. குணமடைந்ததும் தம் சொந்தச் செலவில் அவர் போலந்தை அடைந்தார். நண்பர்கள் சிலர் அவர் பயணத்துக்காக பணம் அளித்து உதவியுள்ளனர்.
“சிங்கப்பூரர்கள் பெரும்பாலானோர் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். என்னைப் பார்த்து இன்னும் பலர் உதவிசெய்ய முன்வருவார்கள் என நம்புகிறேன்,” என்று பிரவின் குறிப்பிட்டார்.
8,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உக்ரேனில் நடக்கும் போரும் நம்மைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்யலாம் என்கிறார் பிரவின்.