இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிஉள்ளது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,183 பேரை கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்திய நாளைப்போல கிட்டத்தட்ட இருமடங்கு பாதிப்பு. கடந்த ஒரு மாதத்தில் பதிவான அன்றாட பாதிப்புகளில் இதுவே ஆக அதிகம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 940 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. டெல்லியில் 517 பேருக்கும் அரியானாவில் 191 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 135 பேருக்கும், மகாராஷ்டிராவில் 127 பேருக்கும் தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் நேற்று 30 பேருக்கு தொற்று உறுதியானது.
டெல்லியில் கடந்த 15 நாள்களில் பாதிப்பு விகிதம் ஐந்து மடங்கு கூடிவிட்டதாக 'லோக்கல் சர்க்கிள்ஸ்' எனும் நிறுவனத்தின் கருத்தாய்வு தெரிவிக்கிறது. அங்கு பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதமும் 5.33% என அதிகரித்துள்ளது.
டெல்லியிலும் அதனை ஒட்டி அமைந்துள்ள காஸியாபாத், நொய்டா நகரங்களிலும் கடந்த சில வாரங்களில் மாணவர்கள் பலரை கொவிட்-19 தொற்றிவிட்டது. இதனால் அங்கு பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒரே ஒரு மாணவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் பள்ளியை மூடும்படி டெல்லி அரசு சென்ற வாரம் ஆணை பிறப்பித்திருந்தது.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு மேலும் 214 பேர் பலியாகிவிட்டனர். அவற்றில் 213 மரணங்கள் கேரள மாநிலத்தில் பதிவாயின. தொற்றால் முன்னர் இறந்து, கணக்கில் சேர்க்கப்படாத 212 பேர் அவர்களில் அடங்குவர். இதனை அடுத்து, கொரோனா தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 521,965ஆக உயர்ந்துவிட்டது.
நாட்டில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளபோதும், நான்காவது தொற்று அலை ஏற்பட வாய்ப்பு குறைவு என்று கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் மணிந்த அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.