உக்ரேனில் வெளியார் யாராவது தலையிட்டால் மின்னல் வேக அணு ஆயுதத் தாக்குதல் தொடங்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்து இருக்கிறார்.
ஆனால் இதை ஒரு பொருட்டாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருதவில்லை.
உக்ரேனுக்கு உலக நாடுகளின் ஆதரவையும் அமெரிக்க ஆதரவையும் அதிகப்படுத்த முயற்சிகளை திரு பைடன் முடுக்கிவிட்டுள்ளார்.
உக்ரேனுக்கு மேலும் US$33 பில்லியன் உதவி வழங்க அங்கீகரிக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் பைடன் கேட்டுக்கொண்டார். ரஷ்யா மீது உக்ரேன் படையெடுத்து இருப்பதை அடுத்து உக்ரேனுக்கு வழங்கக்கூடிய உதவிகளைப் பற்றி விவாதிப்பதற்காக சென்ற வாரம் ஜெர்மனியில் உள்ள அமெரிக்கத் தளத்தில் 40 நாடுகள் அமெரிக்கா தலைமையில் கூடி விவாதித்தன.
அதையடுத்து புட்டின் கடுமையான எச்சரிக்கையைப் பிறப்பித்தார். வெளியார் யாராவது உக்ரேன் சார்பில் நேரடியாக தலையிட்டால் மின்னல் வேக அணு ஆயுதத் தாக்குதல் இடம்பெறும் என்று புட்டின் பிரகடனப்படுத்தினார்.
"வேறு யாரிடமும் இல்லாத ஆயுதங்கள் எங்களிடம் எல்லாம் இருக்கின்றன. வெறும் ஜம்பம் அடித்துக்கொள்ளவில்லை. தேவை எனில் அவற்றைப் பயன்படுத்த தயங்கமாட்டோம்," என்றார் திரு புட்டின்.
ஆனால் ரஷ்ய மிரட்டலை ஒதுக்கித் தள்ளிவிட்டு உக்ரேனுக்கு ஆதரவை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.
உக்ரேனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதன் தொடர்பில் உக்ரேனிய படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவது பற்றியும் அமெரிக்க தற்காப்பு அமைச்சு பகிரங்கமாக அண்மையில் கருத்துரைத்தது.
உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் ஆற்றலைச் சிதைத்து நீண்ட நெடுங்காலத்திற்கு அதைப் பலவீனப்படுத்துவதே தன்னுடைய இலக்கு என்று இப்போது வாஷிங்டன் கூறுகிறது.
உக்ரேன் போரில் இந்தியா நடுநிலைமை வகிக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்குகிறது.
என்றாலும்கூட சிறிய அளவிலான இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவுடன் கூடிய தங்களது தொழில்துறை உறவுகளை நிறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட இத்தகைய நிறுவனங்கள் மேற்கத்திய சந்தைகளுடன் கணிசமான அளவுக்குத் தொடர்பு உடையவை என்பது குறிப்பிடத் தக்கது.