அமைச்சர் வோங்: அடுத்த பெருந்தொற்றுக்குச் சிறந்த முறையில் ஆயத்தப்படுத்தும்
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்த மறுஆய்வு இடம்பெற்று வருவதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 பரவத் தொடங்கியது முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தை அது குறிக்கும்.
இந்த விரிவான, செயல்பாட்டிற்குப் பிந்திய மறுஆய்வானது அடுத்த பெருந்தொற்றைச் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் வகையில் சிங்கப்பூரை வைக்கும் என்றும் முன்னாள் பொதுச் சேவைத் துறைத் தலைவர் பீட்டர் ஹோ அந்த மறுஆய்வு நடவடிக்கையை மேற்பார்வையிடுவார் என்றும் அமைச்சர் வோங் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அரசின் நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்படும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கடந்த ஜூலையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த மறுஆய்வு முறை குறித்தும் அதன்மூலம் கண்டறிவதைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் மன்றத்தில் நேற்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய திரு வோங், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான சிங்கப்பூரின் நடவடிக்கைகளை இரு பரந்த கட்டங்களாக வகைப்படுத்தலாம் என்று குறிப்பிட்டார்.
"கொவிட்-19 பரவத் தொடங்கியதில் இருந்து 2021 ஆகஸ்ட் வரையிலான முதற்கட்டத்தில், கொரோனா கிருமியின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். அதன்பின், அதிகமானோருக்குத் தடுப்பூசி போட்டதும், கொரோனாவுடன் வாழும் வகையில் நமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டோம்.
"இன்னும் கொவிட்-19 தொற்று முடிவிற்கு வரவில்லை என்றபோதும், நிலைமை மேம்பட்டுள்ளது. ஆதலால், நமது முதற்கட்ட அனுபவத்தில் கவனம் செலுத்தும் வகையில், கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த மறுஆய்வை அரசாங்கம் தொடங்கிவிட்டது," என்று அமைச்சர் வோங் விளக்கமாகப் பதிலுரைத்தார்.
கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரின் அனுபவங்கள் குறித்தும் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்தும் முழுமையாக ஆராய மறுஆய்வு இலக்கு கொண்டுள்ளது என்று அப்பெருந்தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் குறிப்பிட்டார்.
இன்னொரு பெருந்தொற்று நிச்சயமாக வரும் என்றும் அவர் சொன்னார்.
மறுஆய்வு நிறைவடைந்தபின் அதன்மூலம் கண்டறிந்தவற்றை அரசாங்கம் பகிர்ந்துகொள்ளும் என்றார் அவர்.
இந்த மறுஆய்வு ஒட்டுமொத்த அரசாங்கமும் பங்குகொள்ளும் நடவடிக்கை எனக் குறிப்பிட்ட திரு வோங், கொவிட்-19 அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு, அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ளத் தயாராவதே இலக்கு என்றும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்.
கடந்த 2003ஆம் ஆண்டில் சார்ஸ் பரவலுக்குப்பின் இதுபோன்ற மறுஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டதை அவர் சுட்டினார்.
அந்த மறுஆய்வே, 'டோர்ஸ்கான்' எனப்படும் தேசிய அளவிலான நோய்ப் பரவலுக்குரிய விழிப்புநிலை எச்சரிக்கைக் கட்டமைப்பை உருவாக்கவும் தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலையம் ஏற்படுத்தவும் வித்திட்டது.
"நமது விநியோகத் தொடர்புகளை எவ்வாறு மேம்படுத்தலாம், பல்வேறு துறைகளிலும் நமது தேசிய மீட்சித்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பன உள்ளிட்ட பரந்துபட்ட அளவில் பல பாடங்களை நாம் இந்த மறுஆய்வின்மூலம் கற்றுக்கொள்வோம் என நம்புகிறோம்," என்றார் திரு வோங்.