உட்புறங்களில் முகக்கவசம் அணியும் நடைமுறை நீடிக்கும்: சுகாதார அமைச்சு
உட்புறங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொவிட்-19 விதிகளைத் தளர்த்த இப்போதைக்குத் திட்டமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
அண்மைய கொவிட்-19 அலை உச்சத்தைக் கடந்துவிட்டபோதிலும் நடப்பிலுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமைச்சு கூறி உள்ளது.
"கொவிட்-19 பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது; அபாயங்களும் நீடிக்கின்றன. அதனால், நிலைமையைப் பொறுத்து நடவடிக்கைகளை முடிவுசெய்வதை சுகாதார அமைச்சு தொடரும்," என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 13ஆம் தேதி 16,870 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை அந்த எண்ணிக்கை 7,776ஆக குறைந்தது. இப்போதைய பாதிப்பிற்கு பிஏ.4, பிஏ.5 ஓமிக்ரான் கிருமித் திரிபுகளே பெரிதும் காரணம்.
இதனையடுத்து, கடைத்தொகுதிகள், பொதுப் போக்குவரத்து போன்றவற்றில் கட்டாயம் முகக் கவசம் அணிவது உட்பட இப்போது நடப்பிலிருக்கும் கொவிட்-19 விதிகளைத் தளர்த்தும் திட்டங்கள் உள்ளனவா என்று கேட்கப்பட, அமைச்சு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
பெரும்பாலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில், மதுக்கூடங்கள், நடனத்துடன் கூடிய இரவுக் கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களுக்குச் செல்வோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
வழிபாட்டு சேவைகள், நேரடி நிகழ்வுகள் போன்ற 500 பேருக்குமேல் பங்கேற்கும் நிகழ்வுகளில் இடம்பெறுவோரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
உட்புறங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறையைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்று சிங்கப்பூர் சுகாதார வல்லுநர்களில் சிலர் அண்மையில் தெரிவித்து இருந்தனர்.
உட்புறங்களில் முகக்கவசம் அணிந்திருப்பதால் விளையும் நன்மைகள் குறித்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரக் கழக ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அலெக்ஸ் குக் கேள்வி எழுப்பி இருந்தார்.
"மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினருக்கும் மேல் தடுப்பூசி போட்டுவிட்டனர். பாதிப் பேருக்குமேல் கொரோனா தொற்றிவிட்டது. ஆதலால், கட்டாய முகக்கவச விதிமுறையைத் தொடர வேண்டிய தேவையில்லை," என்றார் பேராசிரியர் குக்.
ஆயினும், முகக்கவசம் அணிவது அறிகுறியின்றி கொவிட்-19 தொற்றியோரிடையே அது பரவும் அபாயத்தைக் குறைத்துள்ளது என்றும் தொற்றுக்கு ஆளானோர் பிறருடன் கலந்துறவாடும்போதும் முகக்கவசம் அணிவதைத் தொடர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் கடந்த 2020 ஏப்ரலில் கொவிட்-19 பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
கடந்த மார்ச்சில் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் பலவும் தளர்த்தப்பட்டது. அதில், வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை என்பதும் ஒன்று.