நியூயார்க்: கடந்த 1962ஆம் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த பனிப்போருக்குப் பின்னர், உலகம் முதன்முறையாக அணுவாயுதப் பேரழிவு ஏற்படும் அபாயத்தை எதிர்நோக்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
உக்ரேன் போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எவ்வாறு முடிவுக்கு கொண்டு வரக்கூடும் என்று அமெரிக்கா கண்டறிய முயன்று வருவதாக திரு பைடன் கூறினார்.
உக்ரேன் மீதான தாக்குதலைத் தொடர, தாம் அணுவாயுதங்களை, அல்லது ரசாயன, உயிரியல் ஆயுதங் களைப் பயன்படுத்தக்கூடும் என்று அதிபர் புட்டின் 'கேலிக்காக' மிரட்டவில்லை என்றார் திரு பைடன்.
நியூயார்க்கில் தமது ஜனநாயகக் கட்சிக்கு நிதி திரட்ட நேற்றுமுன்தினம் இரவு நடத்தப்பட்ட விருந்தில் கலந்துகொண்டு அதிபர் பைடன் உரையாற்றினார்.
அணுவாயுதப் போர் அபாயம் பற்றி அமெரிக்க அதிபர் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
"கடந்த 1962ஆம் ஆண்டு கென்னடி கியூபா ஏவுகணை நெருக்கடியை எதிர்கொண்டதற்குப் பிறகு அணுவாயுதப் பேரழிவு ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்நோக்கவில்லை," என்று திரு பைடன் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கு அருகே கியூபாவில் அப்போதைய சோவியத் யூனியன் ஏவுகணைகளை நிறுத்தியதால் அணுவாயுதப் போர் அபாயம் சூழ்ந்தது.
உக்ரேன் போரில் அடுத்து அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி தாம் பரிசீலிக்கக்கூடும் என்று திரு புட்டின் கடந்த வாரம் கோடிகாட்டினார். ரஷ்ய பரப்பளவைக் கட்டிக்காக்க தம்மால் முடிந்த எல்லா வழிகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.
ரஷ்யா அத்தகைய ஆயுதங்களை சிறிய, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆனால் அத்தகைய சிறிய தாக்குதல் பெரிய போராக வெடிக்கலாம் என்று திரு பைடன் எச்சரித்தார்.