ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பெருமைகூறி வந்த பாலம் ஒன்று நேற்று அதிகாலை இடிந்துவிழுந்தது.
பாலத்தின் சாலையில் சென்றுகொண்டு இருந்த லாரியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதனருகே எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் தீப்பற்றி எரிந்ததாக அரசாங்கச் செய்தி நிறுவனமான டாஸ் கூறியது. ரயிலின் ஏழு பெட்டிகளுக்கு தீ மளமளவென பரவி எரிந்தது.
தண்டவாளத்தின் ஒரு பகுதியை கரும்புகை மறைத்தது. அதனைத் தொடர்ந்து அந்த 19 கிலோமீட்டர் நீள கெர்ச் நீரிணை பாலத்திலிருந்து வான் நோக்கி தீப்பந்து பறந்தது. கடுமையான தீ காரணமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து கடலுக்குள் விழுந்தது.
2014ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட கிரைமியா தீபகற்பத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய இந்தப் பாலம் வழியாகத்தான் தென் உக்ரேனில் போரிட்டு வரும் ரஷ்யப் படையினருக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவை விநியோகிப்பட்டு வந்தன.
சாலையும் ரயில் போக்குவரத்துக்கான தண்டவாளமும் அருகருகே அமைக்கப்பட்ட கெர்ச் நீரிணை பாலத்தை கடந்த 2018ஆம் ஆண்டு அதிபர் புட்டின் திறந்து வைத்தார்.
பெரும் பொருட்செலவில், அதா வது US$3.7 பில்லியன் (S$5.3 பில்லி யன்) செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்துவைப்பதன் அடையாளமாக அவரே லாரி ஒன்றை அதில் ஓட்டிச் சென்றார்.
இது விபத்து அல்ல என்றும் கார் குண்டு சதி என்றும் ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழுவை மேற்கோள் காட்டி இதர ரஷ்ய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டன. அதற்கிணங்க, கிரைமியாவில் உள்ள வட்டார நாடாளுமன்றத்தின் தலைவர் விளாடிமிர் கோஸ்டான்டிநோவ், இது உக்ரேனிய நாசவேலை என்றார்.
உக்ரேனிய ஆதரவு டெலிகிராம் சமூக ஊடகக் குழு ஒன்றும் இது தாக்குதல் என்றும் விபத்து அல்ல என்றும் கூறியது.
"கிரைமியாவுக்கு இது ஒரு தொடக்கம்," என்று உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகரான மைக்கைலோ போலியாக் தெரிவித்துள்ளார். இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக நேரடியாக எதையும் அவர் குறிப்பிடவில்லை.
"சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்படவேண்டும். உக்ரேனில் இருந்து திருடப்பட்ட அனைத்தும் திருப்பித் தரப்பட வேண்டும். ஆக்கிரமித்த எல்லாப் பகுதியிலிருந்தும் ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டும்," என்று உக்ரேனிய அரசாங்கத்தின் டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
பாலம் எரிந்து விழுந்தது தொடர் பாக உக்ரேனை நேரடியாகக் குற்றம் சாட்டாவிட்டாலும் சதிகாரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று ரஷ்யா சூளுரைத்தது.
பாலத்தில் திடீரென்று வெடிப்பு நிகழ்ந்தது எப்படி என்பதைக் கண்ட றிவதற்கான விசாரணை ரஷ்யா உட னடியாகத் தொடங்கியது.