உக்ரேனியத் தலைநகர் கியவ்வின் மத்திய பகுதியில் நேற்றுக் காலை ஏராளமான வெடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக நகர மேயர் கூறினார். எங்கு பார்த்தாலும் தீப்புகை கருமேகம் போல திரண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிப் படங்கள் பல்வேறு கட்டடங்கள் தீப்பிடித்து எரிவதைக் காட்டின. சிறப்பு ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அண்மைய மாதங்களில் தலைநகர் கியவ் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இது முதல்முறை. அந்நகரில் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படும் முக்கிய சாலைச் சந்திப்பு நேற்று தகர்க்கப்பட்டது. ஏராளமான கட்டடங்களும் வாகனங்களும் தீக்கிரை யாகின.
பல்வேறு நகரங்களின்மீது ஒரே நேரத்தில் ஏராளமான ஏவுகணைகள் வீசப்பட்டதால் அந்நகரங்களில் மின்சார இணைப்பும் தண்ணீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டன.
அடுத்தடுத்து 75 ஏவுகணைகளை உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்யப் படை பாய்ச்சியதாக உக்ரேனிய ராணுவத் தளபதி வலேரி ஸாலுஸ்னி கூறியதாக பிபிசி செய்தி குறிப்பிட்டது.
உக்ரேனின் மேற்குப் பகுதியில் லிவிவ், டெர்னோபிள், ஸைட்டோமிர் ஆகிய நகரங்களின்மீதும் மத்திய உக்ரேனில் டினிப்ரோ மற்றம் கிரமென்சுக் ஆகிய நகரங்களின்மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிழக்குப் பகுதி யிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.
நாடு முழுவதும் 10 பேர் மாண்டதாக உக்ரேனிய காவல்துறை கூறியது.
கிரைமியாவுக்கு இட்டுச் செல்லும், ரஷ்ய செல்வாக்கின் இலக்கணமாகத் திகழ்ந்த பாலம் கடந்த சனிக்கிழமை தகர்க்கப்பட்டதற்குப் பதிலடி நடவடிக்கையாக ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்கள் குறிப்பிட்டன. பாலம் சேதப்படுத்தப்பட்டதை பயங்க ரவாதச் செயல் என்று ரஷ்ய அதிபர் புட்டின் குறிப்பிட்டிருந்தார்.