பெரியவர்களுக்கான பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 4 காசு முதல் 5 காசு வரை, அதாவது 2.9 விழுக்காடு அதிகரிக்கப்பட உள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி முதல் புதிய கட்டணம் நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருடாந்திர கட்டண மறுஆய்விற்குப் பிறகு பொதுப் போக்குவரத்து மன்றம் இதனை அறிவித்தது.
மூத்தோர், மாணவர்கள், குறைந்த வருமான ஊழியர்கள் மற்றும் இயலாதோருக்கான போக்குவரத்துக் கட்டணம் 1 காசு உயர்த்தப்படுகிறது. கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் அல்லது சிங்கப்பூரர்களில் பாதிப்பேர் இந்தப் பிரிவில் உள்ளனர்.
ரொக்கமாகச் செலுத்தப்படும் கட்டணத்திலும் மாதாந்திர பயண அட்டையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
டிசம்பர் 26 முதல், பயண அட்டையைப் பயன்படுத்தும் பெரியவர்கள் 8.2 கிலோமீட்டர் வரையிலான தூரத்திற்கு கூடு
தலாக 4 காசு செலுத்த வேண்டி வரும். இதற்கும் அப்பாற்பட்ட பயண தூரத்திற்கு 5 காசு அதிகரிக்கிறது.
சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பெரியோரில் சுமார் 54 விழுக்காட்டினர் 8.2 கிலோமீட்டருக்கும் குறைவான பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
உயர்த்தப்படும் கட்டணம் எவ்வாறு இருக்கும் என உதாரணம் காட்டப்பட்டு உள்ளது. கிழக்கு-மேற்கு ரயில் தடத்தில் பூன் லே-கிளமெண்டி எம்ஆர்டி நிலையங்
களுக்கு இடைப்பட்ட 8.2 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிகள் $1.45 செலுத்த வேண்டி இருக்கும். தற்போது அந்தக் கட்டணம் $1.41ஆக உள்ளது.
அதேபோல, ஹார்பர்ஃபிரண்ட்-பாய லேபார் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடைப்பட்ட 11.5 கிலோமீட்டர் தூர பயணத்திற்கான கட்டணம் $1.64ஆக அதிகரிக்கும். தற்போது அது $1.59ஆக உள்ளது.
இந்தக் கட்டண உயர்வு இதைவிட அதிகமாக இருந்திருக்கலாம் என்று எரிபொருள் விலை நிலவரத்தைச் சுட்டிக்காட்டி மன்றம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை எரிபொருள் விலைகள் ஏறியதைத் தொடர்ந்து செலவுகள் கணிசமாக உயர்ந்ததாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், தற்போதைய கட்டணக் கணக்கீட்டு முறைப்படி பார்த்தால் அதிகபட்ச கட்டண உயர்வு 13.5 விழுக்காடுவரை இருந்திருக்கலாம் என்றது மன்றம்.
போக்குவரத்து நிறுவனங்களின் செலவு கள் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் எரிசக்தி விலை ஏற்றம்தான். உலக எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு எரிசக்தி விலைகள் 117 விழுக்காடு ஏறியதாக மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பயணக் கட்டணங்களை 13.5 விழுக்காடு என்னும் முழு அளவில் உயர்த்த எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ், எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய போக்குவரத்து நிறுவனங்கள் மன்றத்திடம் அனுமதி கோரி இருந்தன. எரிசக்தி விலையேற்றம், உலகப் பணவீக்கம் உயர்வு, திறனாளர்களை நியமிப் பதிலும் அவர்களைப் பணியில் நீட்டிக்கச் செய்வதிலும் உள்ள சவால்கள் போன்ற வற்றைக் கட்டண உயர்வுக்கான காரணங் களாக அவை குறிப்பிட்டிருந்தன. இவற்றுக்கு இடையே உயர்தரத்திலான, நம்பத்தகுந்த பயணத்தைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவை தெரிவித்திருந்தன.
இருப்பினும், 2.9 விழுக்காடு உயர்வை மட்டும் தற்போது கடைப்பிடிக்கவும் எஞ்சிய 10.6 விழுக்காட்டு உயர்வை வருங்கால கட்டண மறுஆய்விற்குத் தள்ளி வைக்கவும் முடிவு செய்துள்ளதாக மன்றம் கூறியது.