பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 70, கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார். வசிராபாத்தில் திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் இம்ரான் கான் காலில் காயத்துடன் உயிர் தப்பினார். மூன்று அல்லது நான்கு முறை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக பேரணியில் பங்கேற்ற சிலர் கூறினர்.
வசிராபாத்தில் உள்ள ஜாபர் அலிகான் பகுதி யில் திரு கானின் தலைமையில் அரசாங்கத்துக்கு எதிரான பேரணி நடைபெற்றது.
தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரைக் கொல்வதற்கான முயற்சி அரங்கேறியுள்ளது. திரு கானின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் காலில் குண்டு பாய்ந்ததாகவும் முன்னாள் நிதி அமைச்சரும் திரு கானின் 'பிடிஐ' கட்சியைச் சேர்ந்தவருமான ஆசாத் உமர் தெரிவித்தார்.
குண்டு துளைக்காத வாகனத்தில் ஏற்றப்பட்டு அவர் உடனடியாக லாகூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொரு கட்சித் தலைவரான இம்ரான் இஸ்மாயில், திரு கானின் காலில் மூன்று முதல் நான்கு முறை குண்டு பாய்ந்ததாகக் கூறினார்.
'போல் டிவி'க்கு அளித்த பேட்டியில் 'ஏகே-47' துப்பாக்கியால் சுடப்பட்டபோது தானும் திரு கானுடன் இருந்ததாகவும் அவர் சொன்னார்.
சம்பவத்துக்குப் பிறகு திரு கான் ஒரு வாகனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை தொலைக்காட்சி படங்கள் காட்டின. அப்போது அவரை பலர் தாங்கிச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் திரு கான் தவிர மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையில் இறைவன் அருளால் இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன் போராடுவேன் என்று கூறியுள்ளார்.
இம்ரான் கான் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே காவலர்களிடம் சிக்கிய துப்பாக்கிக் காரன், தன்னை யாரும் தூண்டவில்லை என்றும் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் AK-47 துப்பாக்கியுடன் மற்றொரு நபர் இருந்ததாக தகவல் வெளியானது.