துருக்கி, சிரியா எல்லையில் சென்ற திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 50,000 பேர் வரை மாண்டிருக்கக்கூடும் என்று ஐநா நிவாரண அமைப்பின் தலைவர் மார்டின் கிரிஃபித் தெரிவித்து இருக்கிறார்.
துருக்கியில் 24,617 பேரும் சிரியாவில் 3,574 பேரும் மாண்டு இருக்கிறார்கள் என்று இப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொண்டூழியர்கள் மீட்புப் பணிகளில் இடைவிடாமல் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரண்டு மாத கைக்குழந்தை, முதிய மாது, இரண்டு வயது சிறுமி, ஆறு மாதக் கர்ப்பிணி, நான்கு வயது சிறுமி, அந்தச் சிறுமியின் தாயார் ஆகியோர் 128 மணி நேரத்திற்குப் பிறகு சனிக்கிழமை இடிபாடுகளுக்கு இடையே மீட்கப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
அந்த நிலநடுக்கம் காரணமாக ஏறக்குறைய 26 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உடனடியாக $42.8 மில்லியன் அளவுக்குச் சுகாதார பொருள்கள் தேவைப்படுவதால் இவற்றைத் திரட்ட தான் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
டஸன் கணக்கான மருத்துவமனைகள் இடிந்து கிடப்பதை அது சுட்டிக்காட்டியது.
நிலநடுக்கத்தின் விளைவாக குறைந்தபட்சம் 870,000 பேர் பசியில் வாடுகிறார்கள் என்றும் அவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும் ஐநா அமைப்பு அபாயச் சங்கு ஊதியிருக்கிறது.
துருக்கியில் மட்டும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 32,000க்கும் மேற்பட்ட மக்கள் தேடுதல், மீட்புப் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
பல நாடுகளையும் சேர்ந்த 8,294 தொண்டூழியர்களும் அயராது பாடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், துருக்கியில் திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற முயன்றதாகவும் கூறி அந்த நாட்டு அதிகாரிகள் 48 பேரை கைது செய்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
பல கட்டடங்கள் இடிந்துவிட்டதை அடுத்து அவற்றைக் கட்டிய குத்தகைதாரர்கள் சிலர் கைதாகி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, துருக்கியும் அதனுடைய மேற்கத்திய நட்பு நாடுகளும் பயங்கரவாதக் குழு என்று வர்ணித்து வரும் குர்திஸ்தான் பாட்டாளிக் கட்சி என்ற தரப்பு மீட்புப் பணிகளுக்குத் தோதாக போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
35 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ஆர்மீனியா, துருக்கி எல்லை முதல்முறையாகத் திறக்கப்பட்டு ஐந்து வாகனங்களில் உணவும் தண்ணீரும் நிடுநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கொண்டுவரப்பட்டன.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், விமானம் மூலம் பல்வேறு மருத்துவப் பொருள்களுடன் சிரியாவுக்குச் சென்றார்.
அங்கு கண்ட காட்சிகள் தன்னை மனமுடையச் செய்துவிட்டதாக அவர் கூறினார்.