தம் நான்கு இளம் பிள்ளைகளைக் கொன்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஆஸ்திரேலிய மாது ஒருவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று விடுவிக்கப்பட்டார்.
2003ல் குற்றம் நிரூபணமானதாகக் கூறி அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, ‘ஆஸ்திரேலியாவின் ஆக மோசமான பெண் தொடர் கொலையாளி’ என்று திருவாட்டி கேத்லின் ஃபோல்பிக் அழைக்கப்பட்டு வந்தார்.
அப்பிள்ளைகளை மூச்சுத் திணற வைத்து அவர் கொன்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், இயற்கையான காரணங்களாலேயே ஒவ்வொரு பிள்ளையும் இறந்ததாக திருவாட்டி ஃபோல்பிக் தொடர்ந்து கூறி வந்தார்.
ஒன்பது வாரங்களுக்கும் மூன்று வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அப்பிள்ளைகள், 1989க்கும் 1999க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இறந்தனர்.
2021ல் ஆஸ்திரேலியாவையும் வெளிநாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானிகள் பலர், திருவாட்டி ஃபோல்பிக்கை விடுவிக்கக் கோரி மனுவில் கையெழுத்திட்டனர்.
அப்பிள்ளைகளின் மரணங்கள், அரியவகை மரபணு மாற்றத்துடன் அல்லது பிறப்பில் ஏற்பட்ட மருத்துவக் கோளாறு நிலையுடன் தொடர்புடையவை என்று புதிய தடயவியல் சான்றுகள் காண்பித்ததாக விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.
இந்நிலையில், குறைந்தது 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த திருவாட்டி ஃபோல்பிக், 55, நேற்று காலை விடுதலையானார்.
திருவாட்டி ஃபோல்பிக் மன்னிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அவருக்கு எதிராக அளிக்கப்பட்டிருந்த தீர்ப்பை மாற்றியமைக்க நீதிமன்றத்தில் அவர் தனியாக மனுச் செய்ய வேண்டும் என்று அவருடைய நண்பர் பீட்டர் யேட்ஸ் கூறினார். இந்த நடைமுறை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீடிக்கக்கூடும்.