நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பிணி மனைவியை செங்குத்தான பாறையிலிருந்து தள்ளிவிட்ட சீன ஆடவருக்கு தாய்லாந்து உச்ச நீதிமன்றம் 33 ஆண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
யு எனும் குடும்பப் பெயர் கொண்ட அந்த ஆடவர், 2019 ஜூன் மாதம் வடகிழக்கு தாய்லாந்தின் ஃபா தேம் தேசிய பூங்கா இந்தக் குற்றத்தைப் புரிந்தார்.
அப்போது முப்பதுகளில் இருந்த அவரின் மனைவி, ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தார். ஏறக்குறைய 34 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த அவருக்கு 17 எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. அவர் உயிர் பிழைத்தாலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிர் பிழைக்கவில்லை.
அங்கிருந்த வழிப்போக்கர்களால் கண்டறியப்பட்ட அவரை மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவாட்டி வாங் என தமது பெயரைக் குறிப்பிட்ட அந்த மாது, சூதாட்டத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து தம் கணவருக்குக் கடன்சுமை அதிகரித்ததாகக் கூறினார்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, தம்மைக் கொன்றுவிட்டு தமது சொத்துகளை அடைய தம் கணவர் முற்பட்டதாக திருவாட்டி வாங் சொன்னார்.
இந்நிலையில், சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில், தாய்லாந்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமக்கு மனநிறைவு தருவதாக திருவாட்டி வாங் சொன்னதாகக் கூறப்படுகிறது.
கணவருடன் மணவிலக்கு செய்துகொள்ளவிருக்கும் அவர், வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்க தாம் விரும்புவதாகக் கூறினார்.