சீனாவின் வூஹான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா கிருமித்தொற்றால் கடந்த மாதம் 40 சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்று பற்றி கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி முதலில் எச்சரிக்கை விடுத்தவர்களில் ஒருவரான மருத்துவர் லீ வென்லியாங், 34, நேற்று(பிப்ரவரி 8) இறந்த பிறகு, இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. கிருமித்தொற்று பற்றி இணையத்தில் தெரிவித்ததற்காக உள்ளூர் போலிசார் அவர் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்தபோது அந்த மருத்துவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களில் 31 பேர் மருத்துவமனையின் பொது வார்டுகளிலும் எழுவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் பணிபுரிந்தவர்கள் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியால் 10 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு அந்த கிருமி பரவியதாக வூஹான் பல்கலைக்கழகத்தின் ஸோங்னான் மருத்துவமனை வெளியிட்ட அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கை JAMA எனப்படும் அமெரிக்க மருத்துவச் சங்க சஞ்சிகையில் நேற்று (பிப்ரவரி 7) வெளியானது.
வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 நோயாளிகளுக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை மொத்தம் 138 நோயாளிகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் அதில் மருத்துவமனை தொடர்பான கிருமித்தொற்று 41 விழுக்காடு எனவும் ஆய்வறிக்கை தெரிவித்தது.
தற்போதைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியிடமிருந்து சராசரியாக மற்ற 2.2 பேருக்கு கிருமித்தொற்று ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஒரு சிலர் மற்ற நோயாளிகளைவிட கூடுதல் கிருமிப் பரவலுக்குக் காரணமாக இருக்கின்றனர் என்று சவுத்ஹேம்டன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சுகாதார நிபுணர் மைக்கேல் ஹெட் கூறியுள்ளார்.
இவ்வேளையில், ஹுபெய் மாநிலத்தில் அதிக அளவு மருத்துவ ஊழியர்கள் பணிபுரிவதாகவும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லை என்பதையும் அம்மாநிலத்தின் துணை ஆளுநர் கடந்த வியாழக்கிழமை ஒப்புக்கொண்டார்.
#தமிழ்முரசு
#கொரோனா
#சீனா
#மருத்துவஊழியர்களுக்குத்தொற்று