ஜோகூர் சுல்தான் ‘FF1’ என்ற கார் பதிவெண்ணை ஏலத்தில் ஆக அதிகமாக 1.2 மில்லியன் ரிங்கிட் விலைக்கு வாங்கி இருக்கிறார்.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று சுல்தானிடம் அப்பதிவெண்ணை ஒப்படைத்தார். அந்த எண்ணை ஏலத்தில் சுல்தான் 1.2 மில்லியன் ரிங்கிட் விலைக்குக் கேட்டதாக அமைச்சர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். வேறு யாரும் அந்த விலைக்கு அதனை வாங்க முன்வரவில்லை என்றார் அமைச்சர்.
மலேசியச் சாலைப் போக்குவரத்துத் துறையின் 77வது ஆண்டைக் குறிக்கும் வகையில் FF எண் தகடு தொடர் விற்பனைக்கு விடப்பட்டது.
இதற்கு ஆதரவு அதிகம். 34,032 பேர் ஏலத்தில் அதனை வாங்க முன்வந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜோகூர் சுல்தான் புதுமையான கார் பதிவெண்களை வாங்குவதில் விருப்பம் உள்ளவர். ஏற்கெனவே அவர் F1, V1 ஆகிய எண்களை பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.
FF சிறப்பு வாகனப் பதிவெண்களை வாங்க மக்களிடையே பெரும் நாட்டம் நிலவுகிறது. இதன்மூலம் 34 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக வருவாய் கிடைத்துள்ளது என்று மே மாதம் அமைச்சர் கூறியிருந்தார்.