சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷாவை அவமதித்துப் பேசியதாக செலாயாங் அமர்வுகள் நீதிமன்றத்தில் கெடா மாநில இடைக்கால முதல்வர் சனுசி முகம்மது நோர்மீது செவ்வாய்க்கிழமையன்று கீழறுப்புச் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதனையடுத்து, சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ்கால கீழறுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திய மலேசிய அரசாங்கம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்) கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில் இதே கீழறுப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக அரசியல் ஆர்வலர்கள் பலர் சுட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, 48 வயது சனுசி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்குக் கைதுசெய்யப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. சனுசி தங்கியிருந்த கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 20 காவல்துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராகக் கீழறுப்புச் சட்டத்தை அம்னோ தலைமையிலான ‘பாரிசான் நேஷனல்’ (பிஎன்) அரசாங்கம் நியாயமற்ற முறையில் பயன்படுத்திச் சுதந்திரப் பேச்சுரிமையை முடக்கப் பார்ப்பதாக பக்கத்தான் ஹரப்பான் பல ஆண்டுகளாக கண்டனம் தெரிவித்து வந்தது.
நவம்பர் 2022 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ‘பிஎச்’, ‘பிஎன்’ இரண்டும் மலேசியாவை இணைந்து ஆட்சி செய்துவருகின்றன.
எதிர்க்கட்சியான ‘பாஸ்’ கட்சியைச் சேர்ந்த சனுசி, கெடாவின் இடைக்கால முதல்வராக இருப்பதுடன் ‘பிஎன்’ கூட்டணிக்கான கெடா தேர்தல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ‘பிஎன்’ கூட்டணியே மலேசியாவின் முக்கிய எதிர்த்தரப்பாகும்.
இதற்கிடையே, மலேசியாவின் ஆறு மாநிலங்களில் வரவுள்ள தேர்தலில் தமது அரசியல் எதிர்ப்பாளர்களுக்குச் சாதகநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக தாம் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் மௌனமாக்கப்படுவதாகவும் திரு சனுசி கண்டனக்குரல் எழுப்பியுள்ளார்.
“மாநிலத் தேர்தலில் எங்களின் முன்னேற்றத்தை முடக்குவதே அவர்களின் நோக்கம். என்மீதான விசாரணையை மூன்றே நாள்களில் முடித்தனர். அதிகாலை மூன்று மணிக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி நான் கைது செய்யப்பட்டேன். ஊடகங்கள் மூலம்தான் நான் கைதாகப் போவது எனக்குத் தெரியவந்தது. காலையில் வந்துவிடுவேன் என்று நான் கூறியும் அவர்கள் ஹோட்டலில் என்னைக் கைது செய்வதில் குறியாய் இருந்தனர்,” என்றார் சனுசி.
அத்துடன், மலேசிய அரசாங்கம் தற்போது மிரண்டுபோய் இருப்பதாகவும் அவர் சொன்னார். அதிகாரத்தைப் பயன்படுத்திப் பேச்சுரிமையைத் தட்டிப்பறிக்கப் பார்க்கும் போக்கு, அரசாங்கம் அச்சத்தில் உள்ளதற்கான அறிகுறி என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ‘பாஸ்’ தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சிலாங்கூர் இடைக்கால முதல்வர் அமிருதீன் ஷாரி கூறுகையில், “இதன் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. அவர் எல்லைமீறிப் பேசிவிட்டார்,” என்றார்.
சக முதல்வர் என்ற முறையில் திரு சனுசி தாம் கூறிய கருத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பதவிக்கு ஏற்ற பொறுப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் திரு அமிருதீன் குறிப்பிட்டார்.
திரு சனுசியின் உரையை அடுத்து, காவல்துறையிடம் குறைந்தது 57 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மன்னரிடம் திரு சனுசி மன்னிப்புக் கோரியதாவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரு சனுசி மறுத்துள்ளார்.