இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் விலைவாசி விண்ணைமுட்டும் அளவிற்குச் சென்றுவிட்டதால், அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் அங்கு பலரும் அல்லாடி வருகின்றனர்.
இந்நிலையில், ‘பாகிஸ்தானை நரேந்திர மோடி ஆண்டால் மட்டுமே தங்களால் நியாயமான விலையில் பொருள்களை வாங்க முடியும்’ என்று பாகிஸ்தானியர் ஒருவர் கூறும் காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.
யூடியூப் வலையொளிவாசியான சனா அம்ஜத் என்பவர் பதிவிட்டுள்ள அக்காணொளியில், உயிர் வாழ வேண்டுமெனில் பாகிஸ்தானைவிட்டு ஓடிவிடுங்கள், இந்தியாவில் தஞ்சமடைந்தாலும் பரவாயில்லை’ என்ற முழக்கம் தெருக்களில் ஒலிப்பது ஏன் என்று சனா அந்த ஆடவரிடம் கேட்டார்.
அதற்கு அவர், தான் பாகிஸ்தானில் பிறந்திருக்கக்கூடாது என விரும்புகிறேன் என்று பதிலுரைத்தார்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்கக்கூடாது என்று தானும் சக பாகிஸ்தானியர்களும் விரும்புவதாகக் கூறிய அந்த ஆடவர், அப்படி நடந்திருந்தால் தங்களால் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி, இரவில் தங்கள் குழந்தைகளுக்கு உணவளித்திருக்க முடியும் என்றும் சொன்னார்.
“
எங்களுக்கு நவாஸ் ஷரிஃபோ அல்லது பெனசிரோ அல்லது இம்ரானோ அல்லது முஷாரஃபோ தேவையில்லை. எங்களுக்குப் பிரதமர் மோடிதான் வேண்டும். அவரால்தான் இங்குள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும். இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளியலாக உள்ளது. நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை,” என்றார் அவர்.
தான் மோடியின் ஆட்சியின்கீழ் வாழ தயாராக இருப்பதாகக் கூறிய அவர், தங்களுக்கு மோடியைத் தரவேண்டும் என்றும் தங்கள் நாட்டை மோடி ஆளவேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் சொன்னார்.
அத்துடன், பாகிஸ்தானியர்கள் தங்களை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஏனெனில் இரு நாடுகளையும் ஒப்பிடவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.