சோல்: தென்கொரியா முறையான கொள்கையின்கீழ் அதிகமான குடியேறிகளை அனுமதிக்கவேண்டிய நிலையை எட்டியிருக்கிறது என்றும் அவ்வாறு இல்லாமல் போனால் அந்நாடு அழிந்துவிடக்கூடும் என்றும் நீதித்துறை அமைச்சர் ஹான் டொங்-ஹூன் கூறியிருக்கிறார்.
“குடிநுழைவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்ற கட்டத்தை நாங்கள் ஏற்கெனவே கடந்துவிட்டோம்,” என்று ஆளுங்கட்சி கொள்கைக் கூட்டம் ஒன்றில் அவர் கூறினார்.
“அத்தகைய கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிக்காவிட்டால் மக்கள்தொகை நெருக்கடியால் அழிந்துவிடக்கூடிய சாத்தியத்தை தென்கொரியா எதிர்நோக்குகிறது,” என்றார் அவர்.
குடிநுழைவு விவகாரங்களைக் கையாளும் கட்டுப்பாட்டுக் கட்டடமாகச் செயல்படுவதற்குப் புதிய அரசாங்க அமைப்பை நிறுவ அதிபர் யூன் சுக்-இயோலின் நிர்வாகம் மேற்கொண்டுவரும் முயற்சிகளோடு, திரு ஹானின் ஆக அண்மைய கருத்துகள் ஒத்துப்போகின்றன.
கட்டுப்பாட்டுக் கட்டடத்தைச் செயல்படுத்துவதன் தொடர்பிலான அதிபர் யூனின் பேச்சுகள் 2022ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இதுவரை குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றங்கள் ஏதும் தென்படவில்லை.
செயல்படத் தொடங்கியதும், கட்டுப்பாட்டுக் கட்டடம் நீதித்துறை அமைச்சின்கீழ் இயங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய குடிநுழைவுக் கொள்கைகள் என்பது, நாட்டிற்குள் அதிகமான வெளிநாட்டவர்களை மட்டுமே அனுமதிப்பது பற்றியதல்ல என்று திரு ஹான் விளக்கினார்.
“அவை, விரிவான விதிமுறைகளைப் பயன்படுத்தி அனுமதிக்கப்படுவோருக்கான கண்காணிப்பை இறுக்கமாக்குவதற்கும், கள்ளக் குடியேறிகளை மேலும் கடுமையாகக் கையாளும் முறையைக் கடைப்பிடிப்பதற்கும் வகுக்கப்படவேண்டும்,” என்று திரு ஹான் கூறினார்.