இந்தோனீசியாவின் சுமத்ரா தீவை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) காலை உலுக்கிய நிலநடுக்கத்தில் மேற்கு பசாமான் பகுதியில் குறைந்தது இருவர் மாண்டுவிட்டனர்; 20 பேர் காயமடைந்தனர்.
சிங்கப்பூர் நேரப்படி காலை 9.39 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 என்று பதிவானது.
இதனால் சுமார் 100 வீடுகளும் பள்ளி, வங்கி உள்ளிட்ட பல கட்டடங்களும் சேதமடைந்ததாக இந்தோனீசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.
பசாமான், மேற்கு பசாமான் வட்டாரங்களுக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்படவுள்ளனர் என்று அது கூறியது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.