இந்தோனீசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரின் சில பகுதிகளில் இன்று (பிப்ரவரி 25) காலை அதிர்வுகள் உணரப்பட்டன.
பொங்கோல், செங்காங், லாவெண்டர், ஹவ்காங், சாய் சீ ஆகிய பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்த வட்டார வாசிகள் கூறினர்.
இருமுறை அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், ஒவ்வொரு முறையும் அது சுமார் ஐந்து வினாடிகள் நீடித்ததாகவும் ஹவ்காங்கில் வசிக்கும் லின் சுவா ஸ்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
லாவெண்டரில் வசிக்கும் வெண்டி கோவும் அதிர்வுகளை உணர்ந்ததாகச் சொன்னார். சுமார் இரண்டு நிமிடங்கள் அது நீடித்ததாக அவர் கூறினார்.
இன்று காலை சிங்கப்பூர் நேரப்படி 9.39 மணிக்கு நிலநடுக்கம் சுமாத்ராவை உலுக்கியது.
ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 6.2 என்று பதிவானது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்படவில்லை.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவின் சிலாங்கூர், ஜோகூர், மலாக்கா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் உணரப்பட்டதாக மலேசியா ஊடகம் தெரிவித்தது.