யோங் பெங், ஜோகூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் கோழி, முட்டை விநியோகம் அடுத்த இரண்டு வாரங்களில் மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில் நிலைமை சீராகும் என்று மாநில அதிகாரி ஒருவர் கூறினார்.
பொருள் விநியோகத்தில் பிரச்சினை இல்லை என்று ஜோகூரின் முதலீட்டு, வர்த்தக, பயனீட்டாளர் விவகாரக் குழுத் தலைவர் லீ டிங் ஹான் தெரிவித்தார். விழாக்காலத்தில் கிராமத்துப் பகுதிகளில் விநியோகம் குறைந்ததாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு சொன்னார்.
"அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோழி, முட்டைகளுக்கான தேவை குறைந்து அதற்குப் பிறகு விநியோகம் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று திரு லீ குறிப்பிட்டார். விநியோகிக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கை, அவற்றின் விலை ஆகியவை சீராகும் வரை கோழிகள் ஏற்றுமதி செய்யப்படாது என்று அவர் கூறினார்.
"மலேசியாவில் ஆக அதிகமான கோழிகளை விநியோகம் செய்யும் மாநிலங்களில் ஜோகூரும் ஒன்று. யோங் பெங் நகரில் மட்டும் 100க்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன," என்று ஜோகூரின் யோங் பெங் நகரில் உள்ள முட்டைப் பண்ணைக்குச் சென்றபோது திரு லீ சுட்டிக்காட்டினார். கோழி விலை, விநியோகம் இரண்டும் கூடியதாக 42 புகார்கள் வந்துள்ளதாகவும் அவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் திரு லீ தெரிவித்தார்.
கோழி விலை அதிகம் ஏறாமல் பார்த்துக்கொள்ளவும் மலேசியாவிற்குள் அவற்றைப் போதுமான அளவு விநியோகம் செய்யவும் அந்நாடு அவற்றை ஏற்றுமதி செய்வதை இம்மாதம் முதல் நிறுத்தும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சென்ற மாதம் அறிவித்திருந்தார்.