தாய்லாந்தில் சமூக ஊடகப் பிரபலமாக இருந்து பின்னர் தொழில் முனைவராகவும் வெளிநாட்டு நாணய வர்த்தகராகவும் அறியப்பட்ட இளம்பெண் பல மில்லியன் வெள்ளிப் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
நட்டி என்று இணையத்தில் பிரபலமாக அழைக்கப்படும் நத்தமோன் கோங்சாக், 2 பில்லியன் பாட் ( 76.5 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பணத்தை ஏமாற்றினார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நத்தமோனை சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்தவர்கள் அவர் மூலம் வெளிநாட்டு நாணய வர்த்தகத்தில் முதலீடு செய்கிறோம் என்று நம்பி பணம் கொடுத்து ஏமாந்தனர்.
நட்டியை யூடியூப்பில் 800,000க்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். மற்ற சமூக ஊடகங்களிலும் அவர் மிகப் பிரபலம்.
முதலில் ஆடிப் பாடி காணொளிகளைப் பதிவிட்ட அவர், கடந்த ஆண்டு வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனையில் நிபுணராகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்.
பத்து நிமிடங்களில் 300,000 பாட் (11,476 சிங்கப்பூர் வெள்ளி) பணம் சம்பாதித்ததாக அவர் கூறினார்.
பெரும் லாபமும் மாதாமாதம் பணமும் வரும் என்று அவர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி, 6,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
நத்தமோன் தம்மிடம் இருந்த சொகுசுக் கார்கள், கடிகாரங்கள், விலை உயர்ந்த கைப்பைகள் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி சமூக ஊடகத்தில் பதிவிட்டு அவற்றை வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனையில் சம்பாதித்ததாகக் கூறி வந்தார்.
அவருக்கு எதிராக தற்போது 100க்கும் மேற்பட்ட புகார்களைக் காவல்துறை பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து, நத்தமோனைப் பிடிக்க உதவுவோருக்கு 5 மில்லியன் பாட் பரிசை அறிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் அண்மையில் மோசடி செய்த தம்பதிக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் தாய்லாந்து போலிசார் விசாரித்து வருவதாக தி நேஷன் செய்தித்தாள் கூறியது.
சிங்கப்பூரரான பி ஜியாபெங், தாய்லாந்து நாட்டவரான அவரது மனைவி பன்சுக் சிரிவிப்பா இருவரும் சொகுசுப் பொருள்களை விற்பதாகக் கூறி 32 மில்லியன் வெள்ளியை மோசடி செய்தனர். அந்தப் பொருள்கள் வாடிக்கையாளர்களைச் சென்று சேரவே இல்லை.
அந்தத் தம்பதிக்கும் நத்தமோனுக்கும் இடையே இதுவரை எந்தத் தொடர்பும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தாய்லாந்து காவல்துறை கூறியுள்ளது.
நத்தமோன் தற்போது மலேசியாவுக்குத் தப்பி ஓடிவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் கூறியுள்ளன.