அடுத்த வாரம் திங்கட்கிழமை மிக முக்கியமான தகவலை அறிவிக்கப்போவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மார்-அ-லாகோ பகுதியில் தகவலை வெளியிடப்போவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள டேட்டன் நகரில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டபோது குடியரசுக் கட்சியின் திரு டிரம்ப் பேசினார்.
மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் திரு டிரம்ப் போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இப்போது அவர் இவ்வாறு கூறியிருப்பது அதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால் அது அமெரிக்காவின் ஜனநாயக முறைக்கு ஆபத்தாக முடியலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இடைக்காலத் தேர்தல் தொடர்பிலான தமது இறுதி உரையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு பைடன் அவ்வாறு சொன்னார்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உள்ள ஆழமான அரசியல் ரீதியான வேறுபாடுகளை திரு பைடனின் கருத்துகள் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படுகிறது.