மணிலா: தலைநகர் பகுதியில் கடத்தப்பட்டுள்ள 6 சீனர்களின் உறைவிடத்தை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தேடிவருவதாக காவல்துறை அறிவித்தது.
வளமிக்க மக்கள் வாழும் பகுதியாகக் கருதப்படும் தெற்கு மெட்ரோ மணிலாவில் கடந்த திங்கட்கிழமை (அக்.30) 9 பேர் கடத்தப்பட்டனர். அவர்களில் 6 சீனர்களை இன்னும் காணவில்லை, ஏனைய மூன்று பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்கப் பிணைத் தொகையை கடத்தியவர்கள் கேட்கிறார்களா அல்லது என்ன காரணத்துக்காக அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாக கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் காஸ்மி அப்ரெனிகா தெரிவித்தார். கடத்தப்பட்டோரின் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
மணிலாவின் கலுவான் நகரில் அந்த 3 பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். திங்கட்கிழமை விடியற்காலையில் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்களால் தாம் கடத்திச்செல்லப்பட்டதாக விடுவிக்கப்பட்ட ஒருவர் சொன்னதாக அந்நகரக் காவல்துறை தலைவர் பிலிப் அகுயிலர் கூறினார்.
நவீன அடிமைத்தனம் எனப்படும் பொய் வேலை வாய்ப்புகளை நம்பி இணைய மோசடியில் பல சீனர்கள் சிக்கிக்கொள்வதை சீனா அடிக்கடி பிலிப்பீன்சிடம் சுட்டியுள்ளது.