சான் பிரான்சிஸ்கோ: ராணுவம், போதைப்பொருள் கடத்தல், செயற்கை நுண்ணறிவு ஆகிய அம்சங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுவரும் சச்சரவுகளைச் சற்று தணிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனத் தலைவர் ஸி ஜின்பிங் இருவரது சந்திப்பும் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதல்முறையாக இருவரும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொண்டனர்.
இருப்பினும், உலகின் மிகப் பெரிய பொருளியல் நாடுகளாகத் திகழும் அமெரிக்காவும் சீனாவும் தங்களின் முரண்பட்ட கண்ணோட்டத்தை அதிகம் மாற்ற முன்வரும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் நிறைவேறுவது சிரமமே.
தைவான், தென்சீனக் கடல், இஸ்ரேல் ஹமாஸ் போர், உக்ரேன் ரஷ்ய போர், தென்கொரியா, மனித உரிமைகள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பும் நீண்டகாலமாகவே இணக்கம் காணவில்லை. இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து பைடனும் ஸியும் பேச உள்ளதன் தொடர்பில் எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்று இருதரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
“எங்களின் உறவு மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்புவது, ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வது, நெருக்கடியின்போது தொலைபேசிவழி பேசிக்கொள்வது, எங்களின் ராணுவங்கள் தொடர்ந்து ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருப்பது ஆகியவையே எங்கள் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதற்கான அறிகுறிகள்,” என்றார் பைடன்.
ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டுக்காக இரு தலைவர்களும் சான் பிரான்சிஸ்கோ வந்துள்ளதற்கு இடையே, தங்களின் சந்திப்பு நிகழ்ந்தது.
ஒத்துழைக்க உறுதி
இதற்கிடையே, பருவநிலை குறித்து ஒத்துழைப்பு நல்குவதாக அமெரிக்காவும் சீனாவும் உறுதியளித்துள்ளன.
‘மீத்தேன்’ வாயுவைக் குறைத்தல், செயல்திறத்தையும் பசுமைசார்ந்த பொருளியலையும் முடுக்கிவிடுதல், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பில் தகவல் பரிமாறிக்கொள்ளுதல் போன்ற முக்கிய விவகாரங்கள் மீது கவனம் செலுத்தும் ஒரு பணிக்குழுவை மீண்டும் இரு நாடுகளும் தொடங்கவுள்ளன.