அல் ஷிஃபா மருத்துவமனையில் ரத்தக்களரி: உலக சுகாதார நிறுவனம்

அல் ஷிஃபா மருத்துவமனையில் ரத்தக்களரி: உலக சுகாதார நிறுவனம்

2 mins read
64c3ea8e-09fd-46aa-94bb-ff5f860309a3
வீடுகளை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்கள், டிசம்பர் 10ஆம் தேதி காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் கூடினர். - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு நோயாளிகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் அங்கு அவர்களைப் பராமரிக்கக் குறைவான மருத்துவ ஊழியர்களே இருப்பதாகவும் ரத்த வங்கியில் கையிருப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 17ஆம் தேதி உலகச் சுகாதார நிறுவனம் அவ்வாறு கூறியது.

மருந்துகளையும் அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் பொருள்களையும் விநியோகித்த ஐக்கிய நாட்டு நிறுவனக் குழு, அல் ஷிஃபா மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவு ரத்தக்களரியாக இருப்பதாகக் கூறியது.

நூற்றுக்கணக்கான நோயாளிகள் காயம்பட்டு காத்திருக்கும் நிலையில் ஒவ்வொரு நிமிடமும் அத்தகைய புதிய நோயாளிகள் அந்த மருத்துவமனையை நாடிச் செல்வதாகக் கூறப்பட்டது. காயமடைந்தவர்களைத் தரையில் படுக்கவைத்துத் தையல் போடப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களுக்கு வலி நிவாரணி அளிக்கப்படுவதில்லை.

இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் தொடங்குமுன் காஸாவின் வடக்குப் பகுதியில் செயல்பட்ட 24 மருத்துவமனைகளில் நான்கு மட்டுமே இப்போது செயல்படுகின்றன. அவற்றில் அல் ஷிஃபா மருத்துவமனை தவிர்த்து மற்ற மூன்றும் அவ்வளவாகச் செயல்படவில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

கமால் அத்வான் மருத்துவமனையில் நிலவரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த தகவல்களைத் திரட்டி வருவதாக அது குறிப்பிட்டது.

அந்த மருத்துவமனையின் ஓர் இடத்தை ஹமாஸ் போராளிகள் பயன்படுத்துவதாகக் கூறி இஸ்ரேலியப் படையினர் அதை ‘புல்டோசர்’ இயந்திரத்தின் உதவியுடன் இடித்துத் தள்ளியதாக காஸா அதிகாரிகள் கூறினர். ஆனால் கமால் அத்வான் உட்பட எந்த மருத்துவமனையையும் ராணுவ நடவடிக்கைக்குத் தாங்கள் பயன்படுத்தவில்லை என்கிறது காஸா தரப்பு.

முன்னதாக போரின் தொடக்க கட்டத்தில், அல் ஷிஃபா மருத்துவமனையையும் ஹமாஸ் தரப்பு பயன்படுத்துவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

போரை முன்னிட்டு இஸ்ரேலிய ராணுவத்தின் உத்தரவுப்படி வீடுகளை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்களில் பல்லாயிரக் கணக்கானோர் அல் ஷிஃபா மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் பாதுகாப்பான நீருக்கும் உணவுக்கும் அங்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்