லண்டன்: முஸ்லிம் சமூகத்தினரின் பாதுகாப்பிற்காக 117 மில்லியன் பவுண்டு (S$200 மில்லியன்) நிதியுதவி வழங்குவதாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
யூதக் குழுக்களின் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்கப்படும் என்று ஒரு வாரத்திற்குமுன் உறுதியளிக்கப்பட்ட நிலையில், இந்தப் புதிய நிதியுதவி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பள்ளிவாசல்கள், இஸ்லாமிய சமயப் பள்ளிகள், மற்ற சமூக நிலையங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க இந்தப் புதிய நிதி பயன்படுத்தப்படும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ல் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் 335 விழுக்காடு அதிகரித்துவிட்டது என்று முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களைக் கண்காணித்து வரும் ‘டெல் மாமா’ என்ற குழு தெரிவித்துள்ளது.
“முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்விற்கு நம் சமூகத்தில் துளியும் இடமில்லை. மத்தியக் கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகளைக் காரணமாகக் காட்டி, பிரிட்டிஷ் முஸ்லிம்களை இழிவுபடுத்துவதை அனுமதிக்க மாட்டோம்,” என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி கூறியுள்ளார்.
ஆயினும், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டுவதாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்படுகிறது.
லண்டன் மாநகர மேயர் சாதிக் கான், இஸ்லாமியவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிய அமைச்சர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘அக்கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று பிரதமர் சுனக் தெரிவித்தபோதும், அத்தகையோரை ‘இனவாதி’ அல்லது ‘இஸ்லாம் வெறுப்புணர்வு உடையவர்’ என்று பிரதமரோ அவருடைய சக அமைச்சர்களோ குறிப்பிடாதது குறித்தும் சிலர் குறைகூறினர்.
இந்நிலையில், “பிரிட்டிஷ் முஸ்லிம்கள் பக்கம் நிற்போம் என்பதைப் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படியே புதிய நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது என்று என்று திரு கிளவர்லி தெரிவித்துள்ளார் குறிப்பிட்டார்.