பேங்காக்: தாய்லாந்து தலைநகரான பேங்காக்கில் பழ வியாபாரி ஒருவர், கழுத்தை நெரிக்கும் கடன் சுமையைச் சமாளிக்க தன் கண்களில் ஒன்றை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
57 வயதான அவர், தன் கடையின் முன் “கண் விற்பனைக்கு” என்று எழுதப்பட்ட பதாகை ஒன்றை வைத்தார். அதைப் புகைப்படம் எடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தாய்லாந்து நாட்டவர் ஒருவர் மார்ச் 8ஆம் தேதி பதிவிட்டார்.
“அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். பேங்காக்கின் பேங் பான் வட்டாரத்தில் ஒருவர் பழங்கள் விற்பனை செய்வதை நான் கண்டேன். தன் கண்களில் ஒன்றையும் விற்க தயாராக இருப்பதாக அந்தப் பழ வியாபாரி என்னிடம் தெரிவித்தார்,” என அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பதிவு மிகவும் பரவலானது.
தன் கடனை அடைக்க அவசரமாகத் தனக்குப் பணம் தேவைப்படுவதாகவும் முதலீடு செய்வதற்காகத் தான் கடன் பெற்றதாகவும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னால் அதைத் திரும்ப செலுத்த இயலவில்லை எனவும் பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பழ வியாபாரி தாய்லாந்து ஊடகத்திற்கு அளித்த நேர்காணல்களில் தெரிவித்தார்.
தாய்லாந்தில் மனித உறுப்புகளை விற்பது சட்டவிரோதமானது. அதில் ஈடுபடும் மருத்துவர்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.