பென்சில்வேனியா: நோயாளிகள் பலருக்கு அளவிற்கு அதிகமாக இன்சுலின் போட்டுக் கொன்ற அமெரிக்கத் தாதிக்கு மூன்று ஆயுள் தண்டனையும் அதன்பின் 380 முதல் 760 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஹீதர் பிரஸ்டீ, 41, என்ற இந்தத் தாதி, தன்மீதான மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளையும் மற்றக் குற்றச்சாட்டுகளையும் கடந்த வியாழக்கிழமையன்று (மே 2) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2020 முதல் 2023 வரை, நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழக்க ஹீதரே காரணம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவரால் மாண்டோர் 43 முதல் 104 வயதிற்குட்பட்டவர்கள்.
நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்துகொண்டதாலும் அவர்களைத் தகாத சொற்களால் பழித்ததாலும் ஹீதரிடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பினர்.
ஹீதர் 22 நோயாளிகளுக்கு அளவிற்கு அதிகமாக இன்சுலின் கொடுத்ததாகக் கூறப்பட்டது. அவர்களில் சிலருக்கு நீரிழிவு பாதிப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்ற ஆண்டு பிரஸ்டீயின்மீது குற்றச்சாட்டு பதிவான சிறிது காலத்திற்குள் அவரது தாதிமை உரிமம் ரத்து செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒற்றைச் சொல்லிலேயே விடை அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.